டிரைவரே இல்லாமல் தானாக இயங்கும் டிராக்டர் வெளியீடு... களைகளை தானாக தேடி சென்று அகற்றும்!
டிரைவர் இல்லாமலேயே தானாக இயங்கும் டிராக்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் ஓர் செயற்கை நுண்ணறிவு வசதிக் கொண்டதும்கூட. ஆகையால், இது தேவையானது மற்றும் தேவையில்லாதது என அனைத்தையும் தேடி சென்று களையெடுக்கும். இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகளுடன் இந்த டிராக்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வரும் வாகனங்களுக்கு உலகளவில் டிமாண்ட் சற்று கூடுதலாகவே காட்சியளிக்கின்றது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக வாகனங்களில் எக்கசக்க சிறப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், பிரபல டிராக்டர் உற்பத்தி நிறுவனமான ஜான் டீர் (John Deere) அதிக சிறப்பு வசதிகள் அடங்கிய டிராக்டரை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இந்த டிராக்டரை இயக்க ஓட்டுநர் தேவைப்படாது. ஆம், ஓட்டுநர் தேவைப்படா தானியங்கி வசதிக் கொண்ட டிராக்டரையே ஜான் டீர் உருவாக்கியிருக்கின்றது. இதனை தற்போது நடைபெற்று வரும் சிஇஎஸ் 2022 நிகழ்ச்சியில் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த தானாக இயங்கும் டிராக்டரை ஜான் டீர் நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாக செலவிட்டு உருவாக்கி இருக்கின்றது. விவசாயிகளின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக, விவசாயிகள் இல்லாமலே அனைத்து உழவு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை கான்செப்ட் மாடல் வாகனம் என எண்ணிக் கொள்ள வேண்டாம். மிக விரைவில் இவ்வாகனத்தை நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது.

ஆகையால், கூடிய சீக்கிரத்திலேயே ஜான் டீர் நிறுவனத்தின் இந்த தானியங்கி டிராக்டர் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜான் டீர் நிறுவனம் அனைத்து டிராக்டரின் உற்பத்தி பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தானியங்கி டிராக்டர் நிறுவனத்தின் 8ஆர் டிராக்டரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரூசெட் இணைக்கப்பட்ட களப்பை, ஜிபிஎஸ் கருவி மற்றும் இன்னும் பல அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த டிராக்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், தானியங்கி இயக்கத்தை மிக சிறப்பானதாக மாற்றும் வகையில் கூடுதல் சில அம்சங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில், ஆறு ஸ்டீரியோ ரக கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு வசதிக் கொண்ட 360 டிகிரி சுழலும் கேமிராவாகும். இது தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் கண்கானித்து அதற்கு ஏற்ப செயல்பட டிராக்டருக்கு உதவும்.

இந்த டிராக்டரின் மற்றொரு சிறப்பம்சம் என்ன என்றால், இது தானாகவே தேவையானது எது, தேவையில்லாதது எது என்பதை உணர்ந்து செயல்படும் தன்மைக் கொண்டது. ஆம், களையை தானாக கண்டறிந்து அவற்றை நீக்கும். இதுபோன்று பன்முக சிறப்பு வசதிகளுடனேயே ஜான் டீர் டிராக்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் தற்போது கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் அஸ்டர் மற்றும் குளோஸ்டர் ஆகிய எம்ஜி நிறுவனத்தின் கார்களில் இந்த வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. டிராக்டர் குறித்து மற்ற முக்கிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மிக விரைவில் இதுகுறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








