மொத்தமாக வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ள கியா கேரன்ஸ்!! செல்டோஸ் & சொனெட்டின் விற்பனை குறைவு
தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவில் கடந்த சில வருடங்களில் முன்னணி கார் பிராண்டாக உருவெடுத்துள்ளது. இத்தகைய பிராண்டில் இருந்து கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 18,121 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 8% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 16,702 கார்களையே கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கியா பிராண்ட் இந்திய சந்தையில் எந்த அளவிற்கு வளர்ச்சியினை கண்டு வருகிறது என்பதை அறியலாம். இருப்பினும், பண்டிகை நாட்கள் உள்ள கடந்த ஜனவரி மாதத்தில் 19,319 யூனிட் கார்களை கியா விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது கியா கார்களின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 6% குறைந்துள்ளது. ஆனால் இதற்கு கியா நிறுவனம் பெரியதாக கவலைப்படாது.

18,121 யூனிட் கார்களின் விற்பனை உடன் கடந்த ஆண்டு அதிகளவில் பயணிகள் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தை கியா பிடித்துள்ளது. கியாவின் கடந்த மாத சந்தை பங்கு 6% ஆகும். அதாவது விற்பனை செய்யப்பட்ட 100இல் 6 கார்கள் கடந்த மாதத்தில் கியா கார்களாக உள்ளன. வழக்கம்போல் கடந்த மாதத்திலும் அதிகளவில் விற்பனையான கியா காராக செல்டோஸ் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

கியாவின் 5 இருக்கைகளை கொண்ட நடுத்தர-அளவு எஸ்யூவி காரான செல்டோஸ் கடந்த மாதத்தில் 6,575 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதலிடத்தை பிடித்திருப்பினும், உண்மையில் செல்டோஸ் கார்களின் விற்பனை 2021 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் 21% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 8,305 செல்டோஸ் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 2வது இடத்தை சொனெட் பெற்றுள்ளது.

கியாவின் விலை குறைவான காம்பெக்ட் எஸ்யூவி காரான சொனெட் கடந்த மாதத்தில் 6,154 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் சொனெட் கார்கள் விற்கப்பட்டு இருந்த 2021 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 23% குறைவாகும். இவ்வாறு நிறுவனத்தின் இரு பிரதான கார்களின் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ள போதிலும் மொத்த கியா கார்களின் விற்பனை 6% அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், கியா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கேரன்ஸ் எம்பிவி ஆகும். மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு போட்டியாக மலிவான எம்பிவி காராக கொண்டுவரப்பட்டுள்ள கேரன்ஸ் கடந்த மாதத்தில் 5,109 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது எர்டிகாவின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கேரன்ஸிற்கான முன்பதிவுகள் கடந்த 2022 ஜனவரி மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டது. கேரன்ஸிற்கான முன்பதிவுகள் இப்போதுவரையில் மட்டுமே 50 ஆயிரங்கள் என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக சமீபத்தில் கியா நிறுவனம் தெரிவித்திருந்தது. 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேரன்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.99 லட்சங்களில் இருந்து ரூ.16.99 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

செல்டோஸின் அதே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேரன்ஸில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஒற்றை-துண்டு சன்ரூஃப், பின் பயணிகளுக்கு மேற்கூரையில் ஏசி துளைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கேரன்ஸ் எம்பிவி காரை தொடர்ந்து கியா நிறுவனம் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலினை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

இவ்வாறு கேரன்ஸ் உள்பட தங்களது காருக்கான தேவை அதிகரித்து வருவதை உணர்ந்த கியா நிறுவனம் ஆந்திரா பிரதேசத்தில் உள்ள தனது தொழிற்சாலையில் 3வது, இரவு நேர ஷிஃப்ட்டை துவங்கியுள்ளது. கியாவின் ஒரே ஒரு சொகுசு எம்பிவி காராக விளங்கும் கார்னிவல் கடந்த மாதத்தில் 283 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 400 கார்னிவல் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 29% குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








