இப்போ தானே இந்தியாவுக்கு வந்துச்சு!! கியா கார்களின் உற்பத்தி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!
இந்தியாவில் பயணிகள் கார்கள் தயாரிப்பில் வெற்றிக்கரமாக 5 லட்சத்தை நிறைவு செய்துள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தென்கொரியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கியா இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்துவரும் கார் பிராண்டாக விளங்குகிறது. கியா மோட்டார்ஸில் இருந்து கியா என பெயரை கடந்த 2021இல் மாற்றிக்கொண்ட இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் ஆந்திரா பிரதேசம், அனந்தப்பூரில் தொழிற்சாலை உள்ளது.

இந்தியாவில் வாகன தயாரிப்பிற்கான செலவு என்பது மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவுதான். இதன் காரணமாக இந்த அனந்தப்பூர் தொழிற்சாலையில் உள்நாட்டு சந்தைக்கான கியா கார்கள் மட்டுமின்றி, இங்கு தயாரிக்கப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2019ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் இந்த தொழிற்சாலையில் இதுவரையில் மொத்தம் 5 லட்ச கியா கார்கள் உள்நாட்டு விற்பனைக்காகவும், வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டு ஏற்றுமதி 1 லட்ச யூனிட்களை கடந்துவிட்டதாக ஏற்கனவே கியா சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது கியாவின் உள்நாட்டு விற்பனையும் ஏறக்குறைய 4 லட்சத்தை தொட்டுள்ளது. இதனையும் கியா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கியாவின் கார்கள் சுமார் 91 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முதல்முறையாக கியா இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதிகள் 2019 செப்டம்பரில் செல்டோஸ் எஸ்யூவி கார்களில் இருந்து ஆரம்பித்தது.

இந்த குறுகிய காலத்தில் இந்தியாவில் இருந்து அதிகளவில் பயணிகள் கார்களை ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனமாக கியா உருவெடுத்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் மொத்த கார்கள் ஏற்றுமதியில் கியாவின் பங்கு மட்டுமே 25 சதவீதத்திற்கும் அதிகமாகும். ஆந்திராவில் தொழிற்சாலையை கொண்டிருந்தாலும், விசாகப்பட்டினத்தை காட்டிலும் அருகாமையில் உள்ளதால் சென்னை துறைமுகத்தில் இருந்தே பெரும்பான்மையான கியா கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தொழிற்சாலை உற்பத்தியில் இத்தகைய மைல்கல்லை எட்டியிருப்பது குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான டே-ஜின் பார்க் கருத்து தெரிவிக்கையில், "அரை மில்லியன் என்பது ஒரு பெரிய எண் மற்றும் 2.5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் இந்த மைல்கல்லை எட்டியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் பெரும் மதிப்பை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இன்று கியா 4 லட்ச இந்திய குடும்பங்களில் அங்கம் வகிக்கிறது. மேலும் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்த பாசத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சமீபத்திய புதிய கேரன்ஸ் மூலம், எங்களின் அடுத்த மைல்கற்களை மிக வேகமாக அடைவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது நாட்டில் நமது வளர்ச்சி பயணத்தின் போக்கை பட்டியலிடும் புதிய வரையறைகளை உருவாக்குகிறது" என்றார்.

செல்டோஸ், கார்னிவல், சொனெட் மாடல்களை தொடர்ந்து கியா தனது நான்காவது இந்திய மாடலாக கேரன்ஸ் எம்பிவி காரை மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. செல்டோஸ், சொனெட் எஸ்யூவி கார்களை போல் முழுக்க முழுக்க உள்நாட்டில் கிடைக்கும் பாகங்களை கொண்டு தயாரிக்கப்படும் கார் என்பது மட்டுமின்றி, இந்தியாவின் மலிவான எம்பிவி கார்களுள் ஒன்றாகவும் கேரன்ஸ் களமிறக்கப்பட்டுள்ளது.

3-இருக்கை எம்பிவி காரான கேரன்ஸ் குடும்பத்துடன் பயணிப்பதற்கு மிகவும் ஏற்ற வாகனமாகும். கடந்த பிப்.15அம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எம்பிவி காருக்கு முன்பதிவுகள் கடந்த 1 மாதமாகவே நடைபெற்று வருகின்றன. வெற்றிக்கரமாக 5 லட்ச கார்களின் உற்பத்தியை கடந்துள்ள அனந்தப்பூர் தொழிற்சாலையை நிறுவுவதற்காக கடந்த 2017 ஏப்ரலில் ஆந்திரா அரசாங்கத்துடன் கியா ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று 2019 ஆகஸ்ட்டில் தொழிற்சாலை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2019 செப்டம்பர் மாதத்தில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியையும் கியா இந்தியா நிறுவனம் துவங்கியது. இந்த கியா தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு அதிகப்பட்சமாக 3 லட்ச கார்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








