2022 ஜனவரியில், பாதியாக குறைந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனை!! காரணம் என்னவா இருக்கும்?
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான சந்தை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது என்றாலும், அளவில் பெரிய முழு-அளவு எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை என்று பார்த்தால் குறைவு தான். ஏனெனில் இன்னமும் பட்ஜெட் விலையில் காரை வாங்க விரும்புபவர்களே நம் நாட்டில் அதிகமாக உள்ளனர்.

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள முழு-அளவு எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை 1,115 யூனிட்களாகும். 2021 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அளவில்-பெரிய எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் பாதியாக, 52.02% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 2,324 முழு-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அதேபோல் கடந்த 2021 டிசம்பர் மாதத்துடனான மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும் 45.42% சரிந்துள்ளது. ஏனென்றால் அந்த மாதத்தில் இத்தகைய எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை 2 ஆயிரம் யூனிட்களை கடந்திருந்தது. இந்த பிரிவில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியர்களின் ஃபேவரட் டொயோட்டா கார்களுள் ஒன்றான ஃபார்ச்சூனரின் ஆதிக்கமே தொடர்ந்து வருகிறது. 811 யூனிட்களின் விற்பனை உடன் கடந்த ஜனவரி மாதத்திலும் ஃபார்ச்சூனர் முதலிடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தை பெற்றிருப்பினும், உண்மையில் ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனை முந்தைய 2021 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டின் இந்த இரு மாதங்களிலும் முறையே 1,827 மற்றும் 1,169 யூனிட் ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த டொயோட்டா எஸ்யூவி காரின் விற்பனை மாதம்-மாதம் மற்றும் வருடம்-வருடம் ஒப்பீடுகையில் முறையே 30.62% மற்றும் 55.61% குறைந்துள்ளது.

கடந்த மாத மொத்த முழு-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனையில் சுமார் 72.74 சதவீத பங்கை டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடல் கொண்டுள்ளது. ஏனெனில் இதற்கு அடுத்துள்ள எந்த முழு-எஸ்யூவி காரும் 150 யூனிட்கள் கூட கடந்த மாதத்தில் விற்பனையாகவில்லை. அதிகப்பட்சமாக ஃபார்ச்சூனருக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர் 143 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

க்ளோஸ்டரின் இந்த விற்பனை எண்ணிக்கை 475 யூனிட்கள் விற்கப்பட்ட 2021 ஜனவரியை காட்டிலும் சுமார் 69.89% குறைவு என்றாலும், இதற்கு முந்தைய 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 32.41% அதிகமாகும். ஏனெனில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெறும் 108 க்ளோஸ்டர் எஸ்யூவி கார்களையே எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

மூன்றாவது இடத்தில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கோடியாக் உள்ளது. இந்த எஸ்யூவி காரின் விற்பனை நம் நாட்டில் மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் 55 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டிருந்த ஸ்கோடா கோடியாக் கார்கள் கடந்த ஜனவரி மாதத்தில் 113 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நான்காவது இடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸின் முழு-அளவு எஸ்யூவி காரான டக்ஸன் 48 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. 2021 ஜனவரியில் டக்ஸனின் விற்பனை எண்ணிக்கை 125 யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெறும் 35 யூனிட்களாக குறைந்தது. ஆதலால் கடந்த மாத 48 யூனிட்களின் விற்பனையை டக்ஸனின் 37.14 சதவீத விற்பனை வளர்ச்சியாகவே பார்க்க வேண்டும்.

இவை தவிர்த்து மஹிந்திரா அல்டுராஸ் என்கிற முழு-அளவு எஸ்யூவி காரும் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. மஹிந்திராவின் ஒரே ஒரு சொகுசு எஸ்யூவி காராக விளங்கும் அல்டுராஸ் ஜி4 கடந்த ஜனவரியில் 1 யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் 2021 டிசம்பரில் 18 யூனிட்களும், ஜனவரியில் 10 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அதேபோல் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் இந்திய வெளியேற்றத்தால் எண்டேவியர் எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தை தொடர்ந்து, 2022 ஜனவரியிலும் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. ஆனால் 2021 ஜனவரியில் பல முன்னணி மாடல்களுக்கு சவாலளிக்கும் வகையில் கிட்டத்தட்ட 545 யூனிட் எண்டேவியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனாலேயே அனைத்து கார்களையும் கொண்டுவராவிடினும், குறைந்தப்பட்சம் இந்திய வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுவந்த எண்டேவியர், ஈக்கோஸ்போர்ட் என்ற இரு எஸ்யூவி கார்களையாவது ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, மத்திய அரசாங்கத்தின் PLI திட்டத்தால் கவரப்பட்டுள்ள ஃபோர்டு எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க மீண்டும் இந்தியா வர உள்ளதாம்.


Click it and Unblock the Notifications








