முழு-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனை எந்த அளவில் இருக்கு? 2022 மார்ச் மாத நிலவரம்
அளவில் பெரிய, முழு-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனை கடந்த 2022 மார்ச் மாதத்தில் எந்த அளவிற்கு இருந்தது என்பதை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

குறைக்கடத்திகளுக்கு உலகளவில் தேவை நிலவி வருவதால், பயணிகள் கார்கள் விற்பனை வெகுவாக சமீப காலமாக குறைந்து வருகிறது. இதன்படி, போட்டிமிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவிலும் விற்பனை சரிந்து வருகிறது.

இருப்பினும் முழு-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், ஓரளவிற்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த மார்ச் மாதத்தில் விலைமிக்க முழு-அளவு எஸ்யூவி கார்கள் மொத்தமாக 3,442 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 மார்ச்சில் இந்த பிரிவில் இருந்து இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 10.76% அதிகமாக 3,857 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

என்றாலும், கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை 2022 பிப்ரவரி உடன் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் சுமார் 43.72% அதிகமாகும். ஏனென்றால் 2022 பிப்ரவரியில் 2,395 முழு-அளவு எஸ்யூவி கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. வழக்கம்போல் கடந்த மாதத்திலும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட முழு-அளவு எஸ்யூவி காராக ஃபார்ச்சூனர் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதுவே 2021 மார்ச்சில் 2,136 ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனையும், 2022 பிப்ரவரியில் 1,848 யூனிட்கள் விற்பனையுமே சந்தையில் பதிவாகி இருந்தது. இந்த வகையில் ஃபார்ச்சூனரின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 39.70 சதவீதமும், மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 61.47 சதவீதமும் அதிகரித்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அடுத்து இந்த பிரிவில் ஃபோர்டு எண்டேவியரின் ஆதிக்கமே இருந்து வந்தது.

ஆனால் ஃபோர்டு மோட்டார்ஸின் இந்திய வெளியேற்றத்தால் எண்டேவியரின் விற்பனையும் நிறுத்தி கொள்ளப்பட்டது. இதனால் தற்போதைக்கு இந்த பிரிவில் ஃபார்ச்சூனர் மட்டுமே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய மாடலாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், மொத்த முழு-அளவு எஸ்யூவி கார்களின் கடந்த மாத விற்பனையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமே சுமார் 86.69% பங்கை கொண்டுள்ளது.

இதற்கடுத்து 2வது இடத்தில் உள்ள எம்ஜி க்ளோஸ்டரின் விற்பனை எண்ணிக்கை வெறும் 152 ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இந்த எண்ணிக்கையிலான க்ளோஸ்டர் கார்களே விற்பனை செய்யப்பட்டன என்றாலும், 2021 மார்ச்சில் 505 க்ளோஸ்டர் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இதன்படி கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் கடந்த மார்ச் மாதத்தில் இந்த எம்ஜி முழு-அளவு எஸ்யூவி காரின் விற்பனை 69.90% குறைந்துள்ளது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கோடியாக் கடந்த மாதத்தில் 125 யூனிட்களின் விற்பனை உடன் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மார்சில் விற்பனையில் இல்லாத இந்த ஸ்கோடா கார் கடந்த பிப்ரவரியில் 67 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதற்கடுத்து விற்பனையில் 100 யூனிட்களை கடந்த மற்றொரு மாடல் என்றால், அது ஹூண்டாய் டக்ஸன் ஆகும்.

ஹூண்டாயின் பீரிமியம் தர எஸ்யூவி காரான டக்ஸன் கடந்த மார்ச் மாதத்தில் 109 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 143 டக்ஸன் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 மார்ச்சை காட்டிலும் 23.78%-மும், 172 டக்ஸன் கார்கள் விற்கப்பட்டிருந்த 2022 பிப்ரவரியை காட்டிலும் 36.63%-மும் அதிகமாகும். சமீப ஆண்டுகளாக விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காத மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 கடந்த மாதத்தில் 41 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்சிலும் சரி, கடந்த பிப்ரவரியிலும் சரி இவ்வாறான குறைவான விற்பனை எண்ணிக்கையையே மஹிந்திரா பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் கடைசி 6வது இடத்தில் ஸ்கோடா கோடியாக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டிகுவான் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஃபோக்ஸ்வேகன் முழு-அளவு எஸ்யூவி கார் கடந்த பிப்ரவரியில் 130 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

ஆனால் கடந்த மார்ச்சில் வெறும் 31 டிகுவான் எஸ்யூவி கார்களே விற்பனையாகி உள்ளன. இவ்வாறான புதிய மாடல்களின் வருகைக்கு காரணங்களுள் ஒன்று, ஃபோர்டு எண்டேவியரின் விற்பனை நிறுத்தமும் ஆகும். ஃபார்ச்சூனருக்கு அடுத்து சிறப்பாக விற்பனையாகி கொண்டிருந்த எண்டேவியர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கூட கிட்டத்தட்ட 1,024 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications








