உற்பத்திக்கு தயாரான உலகின் முதல் சோலார் எலெக்ட்ரிக் கார்... சார்ஜ் போடாமலே நாள் ஒன்றுக்கு 70 கிமீ பயணிக்கலாம்!
உலகிலேயே முதல் முறையாக சோலாரால் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு தயாராகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நெதர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் லைட் இயர் (Lightyear). இது ஓர் ஆரம்ப நிலை சோலார் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். அதாவது, சோலாரால் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதன் மூலம் இயங்கக் கூடிய வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனமே லைட் இயர்.

இந்த நிறுவனமே கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக வடிவமைப்பில் இருந்த தனது ஓர் சோலார் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரை உற்பத்தி நிலைக்கு உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வாகனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் நிறுவனம் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியது. லைட்இயர் ஒன் (Lightyear One) என்கிற பெயரில் அந்த கான்செப்ட் மாடலை பொதுபார்வைக்குக் கொண்டு வந்தது.

இந்த நிலையிலேயே அக்காரையே நிறுவனம் தற்போது உற்பத்தி நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. ஆகையால், விரைவில் லைட்இயர் ஒன் சோலார் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் யூகிக்க முடிகின்றது. ஆனால், இது விற்பனைக்கு வரும்போது லைட்இயர் ஓ (Lightyear O) என்கிற பெயரிலேயே அறிமுகம் செய்யப்படும்.

இதனை ஏற்கனவே லைட்இயர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. லைட்இயர் நிறுவனம் சோலார் வாகனங்களை உற்பத்தி செய்வதில் கை தேர்ந்த நிறுவனமாக மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே தனது ஒட்டுமொத்த திறனையும் வெளிக் கொண்டு வரும் வகையில் லைட்இயர் ஓ காரை அது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

லைட்இயர் ஓ சோலார் காரில் ஐந்து சதர மீட்டர் அளவுக் கொண்ட வளைவான சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பேனல் கூடுதலாக 70 கிமீ வரை பயணிப்பதற்கான மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது. அதேநேரத்தில் ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் கிமீ பயணிப்பதற்கான மின்சாரத்தை அது சேமிக்குமாம்.

இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட காராகவே லைட்இயர் ஓ உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இக்காரில் 60 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 625 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும்.

இந்த பேட்டரி பேக் மற்றும் சோலார் பேனல் வாயிலாக கிடைக்கும் திறன் ஆகிய இரண்டையும் சேர்த்தால் 695 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இந்த ரேஞ்ஜ் திறன் ஒட்டுமொத்த மின்சார வாகன பிரியர்களையும் வாவ் என கூறுமளவிற்கு வாயை பிளக்கச் செய்திருக்கின்றது.

மேலும், நிறுவனம் தெரிவித்திருக்கும் தகவலின்படி லைட்இயர் ஓ மின்சார காரில் ஒட்டுமொத்தமாக நான்கு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இவையே காரையே 174 குதிரை திறனில் இயங்க செய்ய உதவும். காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிமீ ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 10 செகண்டுகளை லைட்இயர் ஓ எடுத்துக் கொள்ளும்.

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் லைட்இயர் ஓ விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. முதலில் ஐரோப்பிய சந்தைகளிலேயே சோலார் வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்திய மதிப்பில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைட்இயர் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 946 யூனிட்டுகளை மட்டுமே லைட்இயர் ஓ சோலார் எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தனை யூனிட்டுகளையே ஒட்டுமொத்த உலக சந்தைக்காகவும் நிறுவனம் தயார்படுத்த இருக்கின்றது.

உலகம் நாடுகள் பலவற்றில் மின்சார வாகனங்களின் விற்பனை டாப் கியரில் உள்ளன. அதேவேலையில் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையோ பல மடங்கு குறைவாக உள்ளது. ஆகையால், பல இடங்களில் தேவைக்கு ஏற்ப சார்ஜிங் மையங்கள் இல்லாததை நம்மால் காண முடிகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே எந்தவொரு வெளிப்புற சார்ஜிங் மையத்தின் உதவியும் இன்றி சூரிய ஒளியால் சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட காரை லைட்இயர் உருவாக்க தொடங்கியிருக்கின்றது. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்களின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








