இந்தியாவில் பெருகும் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை!! புதியதாக மாருதியில் இருந்து ரெனால்ட் வரையில்..
எஸ்யூவி கார்கள் ட்ரெண்ட் கடந்த சில வருடங்களில் பரவலாக வளர்ச்சியடைந்துள்ளது என்றாலும், அளவில் சிறிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களே அதிகளவில் விற்பனையாகுகின்றன. இதனாலேயே தற்போதைக்கு விற்பனையில் இருக்கும் சற்று அளவில் பெரிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுக்கான சந்தை நல்லப்படியாகவே முன்னேற்றம் கண்டுவிடும் என தோன்றுகிறது. ஏனெனில் பல முன்னணி பிராண்ட்களில் இருந்து இத்தகைய எஸ்யூவி மாடல்கள் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றில் ஐந்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதியின் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி (YFG)
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி சந்தைக்கான புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காரினை டொயோட்டா உடன் இணைந்து வடிவமைத்து வருகிறது. ஒய்.எஃப்.ஜி என்கிற குறியீட்டு பெயருடன் தற்போதைக்கு அழைக்கப்பட்டு வருகின்ற இந்த புதிய எஸ்யூவி கார் மாருதி சுஸுகியின் இப்போதைய கார்கள் வரிசையில் எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக விளங்கவுள்ளது.

டொயோட்டா உடனான கூட்டணியில் உருவாக்கப்படுவதால், டொயோட்டாவின் டிஎன்ஜிஏ (டைஹட்சூ புதிய உலகளாவிய கட்டமைப்பு)-இல் இந்த புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார் உருவாக்கப்பட உள்ளது. உருவத்திற்கு ஏற்ப வலிமையான ஹைப்ரீட் ஆற்றல் வழங்கி இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டாவின் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி (D22)
மாருதி சுஸுகியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து டொயோட்டா பிராண்டில் இருந்தும் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்படும். டி22 என்கிற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வருகின்ற இந்த டொயோட்டா எஸ்யூவி வெர்சன் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் மாருதியின் வெர்சனை காட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இருக்கும்.

ஆனால் தொழிற்நுட்ப அம்சங்கள் பெரும்பான்மையாக இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதேபோல் மாருதி ஒய்.எஃப்.ஜி-யின் வலிமைமிக்க ஹைப்ரீட் என்ஜின் அமைப்பையே டொயோட்டாவின் டி22 நடுத்தர-அளவு எஸ்யூவி காரும் பெற்றுவர வாய்ப்புள்ளது.

டாடா நெக்ஸான் சார்ந்த கூபே எஸ்யூவி
டாடா மோட்டார்ஸின் பயணிகள் கார்கள் வரிசையில் நெக்ஸானிற்கும், ஹெரியருக்கும் இடையேயான இடைவெளியை நிரப்பும் பொருட்டு, புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நெக்ஸானின் அதே எக்ஸ்1 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என கூறப்படும் இந்த புதிய டாடா நடுத்தர-அளவு எஸ்யூவி கார் ப்ளாக்பேர்டு என்கிற பெயரில், கூபே போன்றதான தோற்றத்தை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, டாடா ப்ளாக்பேர்டு முதலாவதாக எலக்ட்ரிக் வெர்சனிலேயே களமிறக்கப்பட உள்ளதாம். அதனை தொடர்ந்தே சில காலம் கழித்து 1.5 லி டர்போ-பெட்ரோல் & 1.5 லி டர்போ-டீசல் என்ற 2 எரிபொருள் என்ஜின் தேர்வுகளில் கிடைக்குமாம். இதன் விலையை நெக்ஸான் இவி-யின் தற்போதைய விலையை காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500
சந்தையில் பிரபலமான எக்ஸ்யூவி500 பெயர்பலகையை மீண்டும் மஹிந்திரா நிறுவனம் வரும் வருடங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய மாடல் போல் 7 இருக்கை அமைப்புடன் இல்லாமல், ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியளிக்கும் வகையில் 5 இருக்கைகளுடன் அறிமுகப்படுத்தப்படலாம்.

தற்போதைய மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃப்ளாட்ஃபாரத்தின் மாடிஃபை வெர்சனை அடிப்படையாக கொண்டதாக புதிய எக்ஸ்யூவி500 இருக்கும் கூறப்படுகிறது. இதில் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளையும் எதிர்பார்க்கலாம்.

ரெனால்ட் டஸ்டர்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் அதன் நடுத்தர-அளவு எஸ்யூவி மாடலான டஸ்டரின் புதிய தலைமுறையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக விற்பனையில் இருந்துவந்த டஸ்டரின் விற்பனை இந்தியாவில் நடப்பு 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் நிறுத்தி கொள்ளப்பட்டது.

டஸ்டர் எஸ்யூவியின் புதிய தலைமுறை சிஎம்எஃப்-பி ஃப்ளாட்பாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதன் உருவாக்க பணிகள் இன்னும் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன. இதனால் உலகளாவிய சந்தையிலேயே புதிய தலைமுறை டஸ்டர் 2023ஆம் ஆண்டிலோ அல்லது 2024ஆம் ஆண்டிலோ தான் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அப்படியென்றால், இந்தியாவிற்கு வர 2025 கூட ஆகலாம்.


Click it and Unblock the Notifications








