இந்தியாவில் சூப்பர் கார்கள் தயாரிக்கப்படவில்லையென யாருங்க சொன்னா!! டிசி அவெண்டி முதல் டாடா ரேஸ்மோ வரையில்
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் உள்ள அளவிற்கு சூப்பர் கார்கள் இந்தியாவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாடு இப்போதுமே 'பட்ஜெட்' ரக கார்களுக்கே நல்லதொரு சந்தையாக விளங்குகிறது. அதாவது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற விலையில், விலைக்கேற்ப போதிய வசதிகளுடன் நன்கு மைலேஜ் & குறைந்த பராமரிப்பு செலவை வழங்கக்கூடிய கார்களே நம் நாட்டில் வெற்றி பெற்றுள்ளன, பெற்றும் வருகின்றன.

இருப்பினும் ஒருபக்கம் சொகுசு & சூப்பர் கார்களை வாங்குவோர் வாங்கி கொண்டுதான் இருக்கின்றனர். அத்தகையவர்களுக்கான சூப்பர் கார்கள் பெரும்பாலும் ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் எதுவும் இல்லையா? என்றால், சில பிராண்ட்கள் சூப்பர் கார் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்களது சூப்பர் கார்கள் முற்றிலுமாக ரெடியாகிவிட்டன. சில மாடல்கள் இன்னமும் கான்செப்ட் வடிவிலேயே உள்ளன. அவற்றில் சிலவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிசி அவெண்டி
இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட சூப்பர் கார்களில் முதன்மையானது டிசி அவெண்டி. ஆனால் நம் நாட்டு வாடிக்கையாளர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததினால், அவெண்டி தற்சமயம் விற்பனையில் இல்லை. ஆனால் முதன்முறையாக காட்சிக்கு கொண்டுவரப்பட்ட போது இந்த இந்திய சூப்பர் கார் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது என்னமோ உண்மைதான்.

இந்த தாழ்வான காரை சுற்றிலும் வழங்கப்பட்ட கூர்மையான லைன்கள் கவனத்தை ஈர்த்தன என்றாலும், வெளிப்புற பேனல்கள் கச்சிதமாக பொருத்தப்படாதது & ஃபினிஷிங் செய்யாதது மற்றும் வழக்கமான தோற்றத்திலான உட்புற கேபின் உள்ளிட்டவை சூப்பர் காருக்கு உண்டான அனுபவத்தை டிசி அவெண்டியில் வழங்கவில்லை. இந்த காரில் ரெனால்ட்டின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டது.

மோட்டார்மைண்ட் ஹைப்பரியன்
கேடிஎம் எக்ஸ்-பௌ காரை பிடித்தவர்களுக்கு நிச்சயமாக மோட்டார்மைண்ட் ஹைப்பரியனை பிடித்திருக்கும். முதன்முதலாக இந்த சூப்பர் கார் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் மோட்டார்மைண்ட் டிசைன் நிறுவனத்தின் சார்பில் ஷாகீத் ஹக் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.

அதன்பின்பு ஆர்டர் ஏதேனும் வந்தால் மட்டுமே ஹைப்பரியன் காரை தயாரிப்பது என்கிற முடிவிற்கு மோட்டார்மைண்ட் வந்தது. அளவில் சிறியதாக இருப்பினும், பெரிய அளவிலான பேனல்கள் இந்த காரை சுற்றிலும் பொருத்தப்பட்டு இருந்தன. ஹைப்பரியனில் ஹூண்டாய் சொனாட்டாவின் வி6 பெட்ரோல் என்ஜினை தயாரிப்பு நிறுவனம் பின்பக்கத்தில் பொருத்தி உள்ளது.

வஜிராணி ஷுல்
'திரிசூலம்'-இன் டிசைனை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட ஹைப்ரீட் சூப்பர் கார் வஜிராணி ஷுல் ஆகும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இதில் ஜெட் என்ஜின் மற்றும் சக்கரத்திற்கு ஒன்று என மொத்தம் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டன.

சகாரா ஃபோர்ஸ் இந்தியா எஃப்1 ரேசிங் குழு மற்றும் யுகே-வை சேர்ந்த டர்பைன் தயாரிப்பு குழுவினரின் கூட்டணியில் உதித்த சூப்பர் காராக ஷுல் விளங்குகிறது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.5 -3.0 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த சூப்பர் காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 300கிமீ ஆகும்.

டாடா ரேஸ்மோ
பயணிகள் கார்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ள டாடா மோட்டார்ஸின் சார்பில் கடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட சூப்பர் கார் தான் டாடா ரேஸ்மோ ஆகும். அந்த கண்காட்சி நிகழ்ச்சியில் எதிர்காலத்திற்கான வடிவமைப்பின் மூலம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்த ரேஸ்மோ, எதிர்காலத்தில் பல்வேறு மாடல்களில் கொண்டுவரப்படலாம்.

ஆனால் தற்போது வரையில் இதன் அறிமுகம் குறித்து டாடா நிறுவனத்தில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை. மைக்ரோசாஃப்ட்-இன் இன்-கேபின் இணைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இதில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 186 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிசி டிசிஏ
முதல் மாடலான அவெண்டியின் மூலம் பெற்ற அனுபவத்தில் டிசி உருவாக்கிய மற்றொரு சூப்பர் கார் டிசிஏ ஆகும். 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டிசி டிசிஏ காரின் தோற்றம் பிரபலமான ஃபெராரி லாஃபெராரி மற்றும் பகானி ஜோண்டா சூப்பர்களை நினைவூட்டுவதாக இருந்தது.


Click it and Unblock the Notifications








