கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களை வாங்கலாம்போல... ரேட்டும் கம்மி, மைலேஜோ அதிகம்... Mahindra Alfa CNG அறிமுகம்!
மஹிந்திரா நிறுவனம் ஆல்ஃபா சிஎன்ஜி (Mahindra Alfa CNG) ஆட்டோக்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் சிறப்பு வசதிகள் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கடுமையாக உயர தொடங்கியிருக்கின்றது. சென்னையில் கடந்த 15 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ. 8.69 வரையிலும், டீசல் விலையில் ரூ. 8.75 வரையிலும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தற்போது பெட்ரோல் ரூ. 110.09க்கும், டீசல் ரூ. 100.18க்கும் விற்கப்படுகின்றது.

இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் மளமளவென உயர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்க்கையை இந்த நிலையை புரட்டிபோட ஆரம்பித்துள்ளது. அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கும் பால், டீ, காப்பி போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் மிக இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையைக் கண்டிக்கும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி போன்ற சில அரசியல் அமைப்புகள் தங்களின் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், மிகக் கடுமையாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து வாடகை வாகன உரிமையாளர்களைக் காக்கும் விதமாக, மஹிந்திரா நிறுவனம், சிஎன்ஜியால் இயங்கக் கூடிய கார்கோ மற்றும் பயணிகள் ஆட்டோவை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஆல்ஃபா எனும் மாடலிலேயே சிஎன்ஜி வெர்ஷனை அது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. மேலே கூறியதைப் போல் கார்கோ மற்றும் பயணிகள் என இரு ரகங்களிலும் இந்த வாகனம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். பயணிகள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆட்டோவானது ஆல்ஃபா பாசஞ்ஜர் டிஎக்ஸ் பிஎஸ்6 சிஎன்ஜி என்ற பெயரிலும், கார்கோ ஆட்டோவானது ஆல்ஃபா லோட் ப்ளஸ் என்ற பெயரிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.57 லட்சம் என்ற குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லக்னோ எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இரு வாகனங்களும்மஹிந்திராவின் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

அந்தவகையில், உபி, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பிஹார், ஜார்கண்ட், கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மஹிந்திரா விற்பனையகங்களில் மட்டுமே கிடைக்கும். தமிழகத்தில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைப்பதற்கான எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த புதிய சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துவதனால் அதன் உரிமையாளரால் பல மடங்கு லாபத்தை ஈட்ட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஐந்தாண்டுகளில் ரூ. 4 லட்சம் வரை அவர்களால் சேமிக்க முடியும் தெரிவித்துள்ளது. ஆகையால், டீசல் வாகனங்களை விட மிக சிறந்ததாக இது காட்சியளிக்கின்றது.

ஆல்ஃபா டிஎக்ஸ் பாசஞ்ஜர் வாகனம் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 40.2 கிமீ மைலேஜையும், லோடு வாகனம் 38.6 கிமீ மைலேஜையும் வழங்கும். இது அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும். இந்த ஆட்டோக்களில், ஆட்டோ வரலாற்றிலேயே இல்லாத வகையில் பெரிய அளவிலான மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆல்ஃபா சிஎன்ஜி ஆட்டோக்களில் 395 cm3, வாட்டர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தமோட்டார் அதிகபட்சமாக 23.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டவை. மஹிந்திரா நிறுவனம் இந்த ஆட்டோக்களை ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இது போன்று சிறப்பு வசதிகளால் மஹிந்திரா ஆல்ஃபா சிஎன்ஜி சிறந்த தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. மேலும், கார்களுக்கு பதிலாக இந்த ஆட்டோவையே வாங்கி வலம் வரலாமோ என நினைக்கத் தோன்றும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, இதன் மைலேஜ் திறன் பலரை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








