இனிமே பாக்க முடியாதா... கண்ணீருடன் விடைபெற போகும் மஹிந்திரா கார்கள்... நல்ல வண்டிக்கு எல்லாம் இப்படி ஆயிருச்சே
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எஸ்யூவி (SUV) ரக கார்களை தயாரிப்பில் உலக புகழ் பெற்று விளங்குகிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எஸ்யூவி கார்களான தார் (Thar), எக்ஸ்யூவி 700 (XUV 700) மற்றும் ஸ்கார்பியோ என் (Scorpio N) ஆகிய மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.
உண்மையில் மஹிந்திரா நிறுவனமே இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்த்திருக்குமா? என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு இந்த 3 கார்களும் வாடிக்கையாளர்களை சுண்டியிழுத்துள்ளன. எனினும் மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு சில பழைய கார்கள் விற்பனையில் சொதப்பி கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. எனவே விற்பனையில் தடுமாறும் ஒரு சில கார்களை மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் கைவிடவுள்ளதாக கூறப்படுகிறது. விற்பனை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மஹிந்திரா கார்கள் குறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்குவது குறித்து பரிசீலனை செய்து வரும் கார்களின் பட்டியலில் முதலில் இருப்பது கேயூவி 100 (KUV 100). மஹிந்திரா கேயூவி 100 கார் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்களை கவர தவறியதால், மஹிந்திரா கேயூவி 100 காரின் விற்பனை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நடப்பாண்டு நவம்பர் மாதம் வெறும் 2 கேயூவி 100 கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
எனவே மஹிந்திரா நிறுவனம் கேயூவி 100 காரின் விற்பனையை வெகு விரைவில் நிறுத்தி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மராஸ்ஸோ (Marazzo) காரின் விற்பனையையும் மஹிந்திரா நிறுவனம் நிறுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டு நவம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 201 மராஸ்ஸோ கார்களை மட்டும்தான் விற்பனை செய்துள்ளது. எனவே மஹிந்திரா மராஸ்ஸோ காரும் விரைவில் விற்பனையில் இருந்து விலக்கப்படலாம்.
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய கார்களுடன் மஹிந்திரா மராஸ்ஸோ போட்டியிட்டு வருகிறது. இது உண்மையில் நல்ல கார்தான் என்றாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறி விட்டது. இந்த பட்டியலில் நாம் பார்க்க போகும் கடைசி கார் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4). மஹிந்திரா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஏற்கனவே அல்டுராஸ் ஜி4 காரை நீக்கி விட்டது.
எனவே மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 காரை விற்பனையில் இருந்து விலக்கி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக அல்டுராஸ் ஜி4 காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் வெகு விரைவில் கேயூவி 100 மற்றும் மராஸ்ஸோ ஆகிய மஹிந்திரா கார்களின் விற்பனையும் வெகு விரைவில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலாக விற்பனையில் அசத்தி வரும் கார்களில், மஹிந்திரா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தற்போது பாதுகாப்பான கார்களை தயாரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே அந்த நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 (XUV 300) மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய 2 கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இந்த வரிசையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரும், குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து சமீபத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது.
இதன் மூலம் மஹிந்திரா நிறுவனமும் தற்போது டாடா (Tata) நிறுவனத்தை போல், 3 கார்களுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், நெக்ஸான் (Nexon), அல்ட்ராஸ் (Altroz) மற்றும் பன்ச் (Punch) ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








