இப்பவே இந்த காரை வாங்க 2 வருசம் காத்திருக்கணும்... இதுல வெளிநாட்டுக்கு வர ஏற்றுமதி பண்ண போறாங்களாம்...
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் எக்ஸ்யூவி 700 காருக்கு ஏற்கனவே 2 வருடக் காத்திருப்பு காலம் இருக்கும் நிலையில் இந்த முடிவால் காத்திருப்பு காலம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சிறப்பான கார்களை தயாரித்து விற்பனையில் கலக்கி வரும் மஹிந்திரா நிறுவனம் தற்போது வெளிநாடுகளிலும் தன் தடத்தைப் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி அந்நிறுவனம் தென்னாப்பிரிக்கா, நேபாளம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நேரடியாக விற்பனை மையங்களை அமைத்து தனது கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்நிறுவனத்தின் தென்னாப்பிரிக்காவின் விற்பனை வெப்சைட்டில் அந்நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஸ்கார்பியோ என் ஆகிய கார்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் இந்த கார்கள் அறிமுகமாகும் போதே அந்நிறுவனம் தென்னாப்பிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் சேர்ந்து அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. விரைவில் வெளிநாட்டிலும் அறிமுகமாகும். தற்போது புக்கிங் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கான வெப்சைட்டில் இந்த எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்கள் கேலரியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த கார்கள் ஆஸ்திரேலியாவிற்கு 2023ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்படும் எனக் குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனம் சர்வதேச மார்கெட்டில் தனது தயாரிப்புகளான எக்ஸ்யூவி500, எக்ஸ்யூவி 300, ஸ்கார்பியோ, ஸ்கார்பியோ பிக்கப், பொலிரோ பிக்கப், கேயூவி 100 ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.

மஹிந்திரா மேலே குறிப்பிட்ட கார்களை வெளிநாடுகளில் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளின் டிசைன் மொழி எந்த நாட்டினருக்குப் பிடிக்கும் என ஆய்வு செய்து அந்த நாடுகளுக்கு மட்டும் தனது தயாரிப்பை விற்பனை செய்து வருகிறது. தற்போது மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களைத் தான் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

ஆனால் வெளிநாடுகளில் இந்தியா அளவிற்கு விற்பனை அதிகரிப்பது கடினம் தான். இதற்கு முக்கியமான காரணம் அந்தந்த நாடுகளில் உள்ள இறக்குமதி வரி தான். ஆனால் இந்நிறுவனம் அந்தந்த நாடுகளில் தயாரிப்பு ஆலைகளைத் துவங்கிவிட்டால் சர்வதேச அளவிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் முந்தைய தலைமுறை ஸ்கார்பியோவை ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரிலும், புதிய ஸ்கார்பியோவை ஸ்கார்பியோ என் என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகிறது. தனது கார்களை எல்லாம் நாசிக்கில் உள்ள தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்து வருகிறது. புதிதாக அறிமுகமாகியுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை பொருத்தவரை இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிறுவனம் இந்த காரின் 2வீல் டிரைவ் மேனுவல் வேரியன்டிற்கு மட்டுமே விலையை அறிவித்துள்ளது. அதுவும் முதல் 25 ஆயிரம் புக்கிங்கிற்கான விலையை மட்டுமே அறிவித்துள்ளது. 4 வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்டிற்கான விலை இன்னும் வெளியாகவில்லை. இந்த கார்களுக்கான புக்கிங் விரைவில் துவங்கவுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இதே ஸ்டாட்டர்ஜியைதான் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கும் கையாண்டது. தற்போது ஸ்கார்பியோ என் காருக்கும் மாதக் கணக்கில் காத்திருப்பு காலம் இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தற்போது எக்ஸ்யூவி 700 மற்றும் தார் ஆகிய கார்களுக்கு அதிகமான காத்திருப்பு காலம் இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை நீங்கள் இன்று புக் செய்தால் உங்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னரே டெலிவரி செய்யப்படும். இந்த காரின் அப்டேட் மாடல் அறிமுகமாகி 1 ஆண்டிற்கு மேல் ஆகிறது. இன்னும் இந்த காருக்கான மவுசு குறையவில்லை. இன்று புக் செய்தால் 2024ம் ஆண்டு தான் டெலிவரி கிடைக்கும்.

அதே போல மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன அறிமுகத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 கார் விரைவில் எலெக்ட்ரிக் வேரியன்டிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இது போக அந்நிறுவனம் தனது எஸ்யூவி லைன்அப் கார்களில் மைல்டு அப்டேட் மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்யூவி 300 ஸ்போர்ட்ஸ், பொலிரோ நியோ பிளஸ் ஆகிய கார்கள் விரைவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








