ஒரு நிறுவனத்தால ஒரே மாசத்துல இப்படி ஒரு வளர்ச்சியை காண முடியுமா? விற்பனையில் சக்கைபோடும் மஹிந்திரா கார்கள்!
விற்பனையிலும், ஏற்றுமதியிலும் மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் கடந்த மே மாதத்தில் வரலாற்று சாதனைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திராவும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கடந்த சில மாதங்களாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் தொடர் விற்பனை வளர்ச்சி பாதையில் மஹிந்திரா நிறுவனம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் 2022 மே மாதம் அமைந்துள்ளது. இந்த மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 208 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை மஹிந்திரா நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இத்தகைய மிக சூப்பரான விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெறுவதற்கு இரு பிரபல கார் மாடல்களே முக்கிய காரணாக இருக்கின்றன.

தார் மற்றும் எக்ஸ்யூவி 700 இந்த இரு எஸ்யூவி ரக மாடல்களே அவை ஆகும். இவ்விரு கார் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பல மாதங்களைக் காத்திருப்பு காலங்களாக கொண்டிருக்கின்ற அளவிற்கு இக்கார் மாடல்களுக்கு டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே 2021 மே மாதத்தைக் காட்டிலும் 2022 மே மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 208 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 53,726 யூனிட் வாகனங்களை போன மாதம் விற்பனைச் செய்திருக்கின்றது. இதில், யுடிலிட்டி வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள் மட்டும் 26,632 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன.

இதேபோல் பயணிகள் வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள் 26,904 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. இதுதவிர 2,028 யூனிட் வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது. இதே கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் பார்த்தேமேயானால் மஹிந்திரா நிறுவனத்தின் யுடிலிட்டி வாகன பிரிவில் 7,748 யூனிட்டுகளையும், பயணிகள் வாகன பிரிவில் 8,004 யூனிட்டுகளை மட்டுமே அது விற்பனைச் செய்திருந்தது.

இந்த எண்ணிக்கைகளைக் காட்டிலும் தற்போது நிறுவனம் விற்பனைச் செய்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் ஆகும். இத்தகைய பிரமாண்ட விற்பனை ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதேபோல் நிறுவனத்தின் கமர்சியல் மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரிவில் நிறுவனம் 230 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. சுமார் 24,794 யூனிட்டுகளை அது விற்பனைச் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் மின்சார மூன்று சக்கர வாகனங்களும் இந்த விற்பனை எண்ணிக்கையில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அதிகபட்ச விற்பனை எண்ணிக்கைகளால் மஹிந்திரா நிறுவனம் தற்போது குஷியில் ஆழ்ந்திருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் இந்த மகிழ்ச்சி வரும் காலத்திலும் தொடரும் என நம்பப்படுகின்றது. ஏனெனில் மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையை புதுமுக வாகனங்களால் அலங்கரிக்க இருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் புதுமுக ஸ்கார்பியோ என் காருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

நிறுவனம் ஸ்கார்பியோ என் மாடலை இந்த மாதம் 27ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. சமீபத்தில்தான் இதுகுறித்த தகவலை மஹிந்திரா நிறுவனம் உறுதிப்படுத்தியது. ஆகையால், ஆஃப்-ரோடு மற்றும் எஸ்யூவி கார் பிரியர்கள் இந்த தேதியை எதிர்நோக்கி அதிக ஆவலுடன் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோக் காட்டிலும் பல மடங்கு முரட்டுத் தனமான தோற்றம், அதிக தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்ட அம்சங்கள் என பல சிறப்புகளுடன் ஸ்கார்பியோ என் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வருகை நிச்சயம் புதுமையான வாகனத்தை விரும்புபவர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட்டாக அமைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








