சூப்பரு... மஹிந்திராவின் முதல் 3 எலக்ட்ரிக் கார்களின் தோற்றம் இதுதானா!! ஜூலையில் முக்கிய அறிவிப்பு!
மஹிந்திரா அதன் எதிர்கால எலக்ட்ரிக் பார்வைக்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 3 புதிய இவி கான்செப்ட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதனாலேயே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்தே எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைக்கும் மற்றும் தயாரிக்கும் பணிகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இறங்கிவிட்டன.

இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்து வந்தாலும், விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை குறைவே. ஏனெனில் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து மட்டுமே இந்தியாவிற்கான எலக்ட்ரிக் கார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

எம்ஜி மோட்டார், ஹூண்டாய் போன்றவையும் எலக்ட்ரிக் கார்களை வெளிநாட்டில் இருந்து பாகங்களாகவோ அல்லது முழு காராகவோ தயாரித்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்கின்றன. இருப்பினும் மற்ற இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களான மாருதி சுஸுகி, மஹிந்திரா போன்றவற்றில் இருந்து இன்னும் எந்தவொரு எலக்ட்ரிக் காரும் களமிறக்கப்படவில்லை.

இதற்கிடையில் மஹிந்திரா & மஹிந்திரா கடந்த 2021ஆம் ஆண்டில் தனது எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இயக்குத்தளத்தை பற்றி அறிவித்திருந்தது. மின்சார வாகனங்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த இயக்குத்தளம் மஹிந்திராவின் வருங்கால தயாரிப்பு வாகனங்களில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது 'எலக்ட்ரிக் பார்வை பிறப்பு' (Born EV platform) அதிகாரப்பூர்வமாக வருகிற ஜூலை மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில், இந்த மஹிந்திரா இவி ப்ளாட்ஃபாரத்தில் இருந்து உருவாக்கப்பட உள்ள எலக்ட்ரிக் கார்களின் 3 கான்செப்ட் மாதிரிகள் காட்சி தந்துள்ளன.
வீடியோவில், இருளில் இந்த கான்செப்ட் மாதிரிகள் நிற்க வைக்கப்பட்டுள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளதால், இவற்றின் தோற்றத்தினை தெளிவாக காண இயலவில்லை. முன்பக்கத்தில் பளிச்சிடும் இவற்றின் எல்இடி ஹெட்லைட்களை மட்டுமே காண முடிகிறது. உருவத்தை வைத்து பார்க்கும்போது, இவை மூன்றும் மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700-இன் பரிணாம வளர்ச்சிகளாக தோற்றமளிக்கின்றன.

இருப்பினும் இவை மூன்றிற்கும் இடையே மிகவும் நுட்பமான வித்தியாசங்களை மஹிந்திரா வழங்கியுள்ளது போலவே தெரிகிறது. அதாவது இவை மூன்றில் ஒன்று அளவில் சிறியதாக இருப்பதுபோன்று உள்ளது. ஆதலால் இவை எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி700 மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள எக்ஸ்யூவி900 மாடல்களின் எலக்ட்ரிக் வெர்சன்களாக இருக்கலாம்.

அதாவது, மஹிந்திராவின் இந்த 3 எஸ்யூவிகளின் அடிப்படையில் நிறுவனத்தின் முதல் 3 எலக்ட்ரிக் கார்கள் கொண்டுவரப்படலாம். இருப்பினும் எரிபொருள் கார்களுக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கும் இடையே தோற்றத்தில் மிக முக்கியமான வித்தியாசங்களை கொண்டுவர மஹிந்திரா முயற்சிக்கும். மேலும் சில டீசர் வீடியோக்களும், சோதனை ஓட்ட ஸ்பை படங்களும் வெளிவந்தால்தான் மஹிந்திராவின் ஆரம்பகால எலக்ட்ரிக் கார்களை பற்றிய ஒரு ஐடியா நமக்கு கிடைக்கும்.

மேலுள்ள வீடியோவில் இந்த எதிர்கால இவி-கள் யுகே-வில் உள்ள மஹிந்திரா & மஹிந்திராவின் உலகளாவிய வடிவமைப்பு மையமான மஹிந்திரா அதிநவீன வடிவமைப்பு ஐரோப்பா (MADE)-இல் வடிவமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தங்களது முதல் இரு எலக்ட்ரிக் கார்கள் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இயக்குத்தளம் நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியிலேயே வெளியீடு செய்யப்பட உள்ளதால், மஹிந்திராவின் முதல் எலக்ட்ரிக் கார் 2025க்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. மற்றப்படி Born EV platform பற்றிய விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. இதற்கு நீங்கள் வரும் ஜூலை மாதம் வரையில் காத்திருந்தாக வேண்டும்.

குறைந்தப்பட்சம் மஹிந்திரா எலக்ட்ரிக் கான்செப்ட்களாவது இந்த வருடத்திற்கு உள்ளாக முழுமையாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறான முற்றிலும் புதிய எலக்ட்ரிக் கார்கள் ஒருபுறம் இருக்க, தற்போதைய எரிபொருள் கார்களின் எலக்ட்ரிக் வெர்சன்களையும் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாம். இதன்படி கேயூவி100-இன் எலக்ட்ரிக் வெர்சன் இகேயூவி100 என்கிற பெயரில் இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








