அவமதித்த ஷோரூம் ஊழியருக்கு தக்க பாடம் புகட்டிய விவசாயி... இனி விவசாயினு யாரும் அசால்டா நினைக்க மாட்டாங்க!!
புதிய கார் வாங்க சென்ற விவசாயி ஒருவரை மஹிந்திரா ஷோரூம் ஊழியர் அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தன்னை அவமதித்த நபருக்கு தகுந்த பாடத்தை புகட்டும் வகையில் விவசாயி தரமான சம்பவத்தை செய்திருக்கின்றார். இது குறித்து இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கர்நாடகா மாநிலம் துமகுரு (தும்குர்) பகுதியில் மஹிந்திரா நிறுவன கார்கள் விற்பனையகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஷோரூமிற்கு மஹிந்திராவின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றான பொலிரோ பிக்-அப் ட்ரக்கை வாங்கும் எண்ணத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சென்றிருக்கின்றார்.

அந்த நேரத்தில் அவர் (விவசாயி) மிகவும் எளிமையான உடையை அணிந்துக் கொண்டு, மிக சாதாரணமான தோற்றத்தில் இருந்திருக்கின்றார். இந்த எளிய தோற்றத்தைக் கண்ட விற்பனையக ஊழியர், விவசாயி பொழுதுபோக்கிற்கு ஷோரூமிற்குள் நுழைந்திருப்பதாக எண்ணிக் கொண்டு, மிகவும் ஏளமானதாக பேசி, கிண்டல் செய்திருக்கின்றார்.

மேலும், "அந்த வாகனம் (பொலிரோ பிக்-அப் ட்ரக்) பத்து ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும் வாகனம் அல்ல" என்று விவசாயியிடம் ஊழியர் கூறியிருக்கின்றார். இதனால், மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிய அந்த விவசாயி, அலட்சியமாக பேசிய சேல்ஸ்மேனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.

தொடர்ந்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் பத்து லட்ச ரூபாயை நான் புரட்டி வருகின்றேன் என கூறி ஊழியரிடம் விவசாயி சவால் விட்டிருக்கின்றார். முன்னதாக, காரின் விலையைக் கேட்டறிந்த அந்த விவசாயி, பணத்தை மொத்தமாக ஒப்படைத்தால் எத்தனை நாட்களில் கார் டெலிவரி கொடுக்கப்படும் என கேட்டிருக்கின்றார்.

விவசாயியால் பணத்தை புரட்ட முடியாத என்று எண்ணிய அந்த ஊழியர், உடனடியாக டெலிவரி கொடுக்கப்படும் என வாய் சவடால் விட்டிருக்கின்றார். தான் விட்ட சவாலை நிறை வேண்டும் என்ற எண்ணத்தில் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்ட அந்த விவசாயி, தனது நண்பர்களுடன் ஷோரூமிற்கு அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே வந்திருக்கின்றார்.

பத்து லட்ச ரூபாய் பணத்துடன் அவர் ஷோரூமிற்குள் நுழைந்திருக்கின்றார். மேலும், 'இந்தாங்க பணம், உடனே காரை டெலிவரி கொடுங்க' என விவசாயி கூறியிருக்கின்றார். இதனைக் கண்டு அதிர்ந்து போன ஷோரூம் ஊழியர் வாயடைத்து போயிருக்கின்றார். பேச முடியாமல் நின்றுக் கொண்டிருந்த அவர், "காரை ஒரே நாளில் டெலிவரி கொடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. குறைந்தது 2 முதல் 5 நாட்கள் வரை ஆகும்" என கூறியிருக்கின்றார்.

ஊழியரின் இந்த பதில் விவசாயிக்கும், அவரது நண்பர்களுக்கும் எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இதன் விளைவாக இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த வாக்குவாதம் முற்றுவதற்கு முன்னரே சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விவசாயியை அவமானப்படுத்தும் வகையில் நடந்துக் கொண்ட கார் விற்பனையக ஊழியர் மீது வழக்கு பதிவு செய்வதாக காவலர்கள் வாக்குறுதியளித்தன் அடிப்படையில், விவசாயியும் அவரது நண்பர்களும் சமாதானமடைந்து, அங்கிருந்து புறப்பட்டனர். அதேநேரத்தில், விற்பனையக நிர்வாகமும், அதன் ஊழியர்கள் சிலரும் எழுத்து பூர்வமாக விவசாயியிடம் மன்னிப்பு கோரியிருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், சம்பவம்குறித்த வீடியோ தற்போது நாடு முழுவதும் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது. ஷோரூம் ஊழியரின் இந்த அடாவடி தனம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியிருக்கின்றது. "எப்படி இதுபோன்று விற்பனையக ஊழியர் நடந்துக் கொள்ளலாம்" என பலர் விற்பனையக நிர்வாகத்தை சாடி வருகின்றனர்.

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த பிக்-அப் ட்ரக் இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக் கூடிய வாகனமாகும். சரக்குகளை கையாளுவதற்காக பிரத்யேகமாக வர்த்தக பிரிவில் இவ்வாகனத்தை மஹிந்திரா விற்பனைச் செய்து வருகின்றது. எக்ஸ்ட்ரா லாங், எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் மற்றும் கேம்பர் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இவ்வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 8.64 லட்சம் தொடங்கி ரூ. 9.54 லட்சம் வரையிலான விலையில் இது விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications