போட்டி அனல் பறக்க போகுது... விற்பனைக்கு வருகிறது மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் கார்... டாடாவுக்கு சவால்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்து விட்டன. டாடா நெக்ஸான், டாடா டிகோர், எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா என நிறைய எலெக்ட்ரிக் கார்கள் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுதவிர சொகுசு எலெக்ட்ரிக் கார்களும் கூட இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ளது. இதற்கு நேரடி போட்டியாக எந்த எலெக்ட்ரிக் காரும் விற்பனையில் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால் கூடிய விரைவில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நேரடி போட்டி ஏற்படவுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரை விற்பனை செய்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்பின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் சாலை சோதனைக்கு உட்படுத்தியது. தற்போதும் உட்படுத்தி வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்க செய்தன.

ஆனால் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இந்த கேள்விக்கு மஹிந்திரா நிறுவனம் தற்போது பதில் அளித்துள்ளது. இதன்படி வரும் 2023ம் ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டில், எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் எலெக்ட்ரிக் கார்கள் தொடர்பான தங்களது முழுமையான திட்டங்கள் மற்றும் யுக்திகளை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் மிக முக்கியமான தயாரிப்பாக இருக்கும். அத்துடன் தற்போதைக்கு எலெக்ட்ரிக் மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன செக்மெண்ட்டில் கவனம் செலுத்த இருப்பதாகவும் மஹிந்திரா கூறியுள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா இந்த தகவலை தெரிவித்துள்ளார். மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்தபின், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக திகழும். இந்த 2 கார்களும் ஐசி இன்ஜின் செக்மெண்ட்டிலும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 கார்களின் ஐசி இன்ஜின் வெர்ஷன்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே எலெக்ட்ரிக் செக்மெண்ட்டிலும் டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் பரபரப்பாக இயங்கி வருகிறது. மஹிந்திரா கடைசியாக அறிமுகம் செய்த புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய 2 கார்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த 2 கார்களையும் முன்பதிவு செய்து விட்டு டெலிவரிக்காக நிறைய வாடிக்கையாளர்கள் காத்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு 2 கார்களையும் விரைவாக டெலிவரி செய்ய வேண்டிய பொறுப்பு மஹிந்திரா நிறுவனத்திற்கு உள்ளது. ஆனால் செமிகண்டக்டர் சிப்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறையால் பல்வேறு நிறுவனங்களின் கார்களுடைய உற்பத்தி தற்போது மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் மஹிந்திரா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. புதிய தலைமுறை தார், எக்ஸ்யூவி700 கார்களை போலவே, புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








