எக்ஸ்யூவி700 காரை இவ்ளோ பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? மஹிந்திரா நிறுவனமே இதை எதிர்பார்த்திருக்காது!
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எக்ஸ்யூவி700 காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. வெறும் 4 மாதங்களில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களுக்கும் மேல் உள்ளது.

இந்த நீண்ட காத்திருப்பு காலம் தற்போதைக்கு குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த உடனேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன்பலனாக வெறும் 3 மணி நேரங்களுக்கு உள்ளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெற்றது. தற்போது இந்த முன்பதிவு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தற்போது எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் மிக அதிக அளவில் முன்பதிவுகள் குவிந்திருப்பதும், செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையும் டெலிவரி பணிகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த 2 முக்கியமான காரணங்களால்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில், 2.0 லிட்டர் mStallion டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஹெச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் தேர்வும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 182 பிஹெச்பி பவரை வழங்க கூடியது.

அதே நேரத்தில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடலில் இந்த இன்ஜின் 420 என்எம் டார்க் திறனையும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 450 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்ததாக உள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களுடனும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ கார் மிகவும் முக்கியமானது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அனேகமாக நடப்பு ஆண்டில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவிலேயே இந்த கார் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை தொடர்ந்து விலை அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும்.

அடுத்த ஆண்டில், அதாவது 2023ம் ஆண்டில் எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2023ம் ஆண்டின் 3வது அல்லது 4வது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக திகழும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். மேலும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுடனும், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் போட்டியிடலாம்.

ஆனால் மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை செமிகண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை பிரச்னை நிவர்த்தியாவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி பெறுவதற்காக நிறைய பேர் காத்து கொண்டுள்ளனர். செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையுடன், முன்பதிவுகளும் அதிகமாக உள்ளதால், காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது.

ஆனால் இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மட்டுமான பிரச்னை கிடையாது. இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இந்த பிரச்னை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. தற்போதைய அதிநவீன கார்களுக்கு செமிகண்டக்டர் சிப்கள் மிக முக்கியமான தேவை என்பதால், கார் உற்பத்தியில் உலக அளவில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








