இந்திய தயாரிப்பு... போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய மஹிந்திரா கார்... வேற லெவல்ல சேல்ஸ் ஆகுது!
மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. எக்ஸ்யூவி700 காருக்கு மஹிந்திரா நிறுவனம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதே இதற்கு சாட்சி. இது மிக பிரம்மாண்டமான முன்பதிவு எண்ணிக்கை என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளதால், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலம் 1.5 வருடங்கள் வரை நீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீண்ட காத்திருப்பு காலத்தை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி700 கார்களை விரைவாக டெலிவரி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 4,138 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த பிப்ரவரி மாதம், தனது ரகத்தில் அதிகம் விற்பனையான எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை, மஹிந்திரா எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது. மறுபக்கம் டாடா நிறுவனம் 2,619 ஹாரியர் கார்களையும், 1,919 சஃபாரி கார்களையும் விற்பனை செய்துள்ளது.

இதே காலகட்டத்தில், அதாவது கடந்த பிப்ரவரி மாதம், ஹூண்டாய் நிறுவனம் 2,516 அல்கஸார் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய இரண்டு கார்களும் ஒன்றாக சேர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 2,102 என்ற விற்பனை எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்துள்ளன.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பணிகளை அதிகரித்துள்ளது. இதேபோல் தார் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகளும் மஹிந்திரா நிறுவனத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எக்ஸ்யூவி700 காரை போலவே, மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே தார் எஸ்யூவி காருக்கும் முன்பதிவுகள் குவிந்துள்ளன. எனவே இந்த 2 கார்களையும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, உற்பத்தி பணிகளை மஹிந்திரா நிறுவனம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பேரணியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பயன்படுத்தினார். 'மேட் இன் இந்தியா' தயாரிப்பை பயன்படுத்தியதற்காக, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூட, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் பிரதமர் மோடியுடன் சேர்த்து, அவர் பயன்படுத்திய மஹிந்திரா தார் எஸ்யூவி காரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதற்கிடையே செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்களும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கார் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் தார் எஸ்யூவி கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதற்கு, இந்த செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்னையையும் சமாளித்துதான் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 மற்றும் தார் ஆகிய இரண்டு கார்களையும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் இந்திய சாலைகளில் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி புதிய தலைமுறை ஸ்கார்பியோ கார் நடப்பாண்டே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை வரும் மாதங்களிலும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் அறிமுகம் தள்ளி போகுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








