சிப்கள் பற்றாக்குறை... டர்ன் இண்டிகேட்டர்களை இழந்திருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!!
சிப் பற்றாக்குறையின் காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் சில வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

குறைக்கடத்திகளின் உலகளாவிய பற்றாக்குறையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு இன்னல்களை கடந்த 1 வருடத்திற்கும் மேலாக சந்தித்து வருகின்றன. சிப்கள் அதிகமாக எலக்ட்ரானிக் பொருட்களை உருவாக்குவதற்கு தேவைப்படும். தற்போதைய மாடர்ன் கார்களில் இன்ஃபோடெயின்மெண்ட், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என ஏகப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் வழங்கப்படுகின்றன. இவற்றை போதிய அளவு தயாரிக்க முடியாததினால் மொத்த காரின் உற்பத்தியும் தாமதமாகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் காரை முன்பதிவு செய்து நீண்ட மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலினால் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் உருவான இந்த பிரச்சனை மிகவும் மெதுவாக சீராகி வருகிறது என்றாலும், அதுவரையில் காத்திருக்க விரும்பாத கார் தயாரிப்பு நிறுவனங்கள் வேறு மாற்று வழிகளை யோசித்து வருகின்றன.

இந்த வகையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அதன் டீலர்ஷிப் மையங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளது. அதில், பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களுடன் ஒருங்கிணைக்கப்படும் சதுர வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் இரண்டாம் ஸ்மார்ட் கீ இனி எந்தவொரு எக்ஸ்யூவி700 காரிலும் சில காலத்திற்கு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொழிற்நுட்ப அம்சங்கள் எக்ஸ்யூவி700-இல் இருந்து நீக்கப்படவில்லை எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சதுர வடிவிலான இண்டிகேட்டர்கள் எக்ஸ்யூவி700 எஸ்யூவி மாடலின் ஏஎக்ஸ்5, ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7எல் வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வந்தன. இவை நீக்கப்பட்டுள்ளதால் கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில் நிலைமை சீரானவுடன் டீலர்ஷிப் மையத்தின் சார்பாக இவை பின்னர் காரில் பொருத்தப்படும்.

சாவியில்லா நுழைவிற்கு வழிவகுக்கும் இரண்டாம் ஸ்மார்ட் கீ ஆனது எக்ஸ்யூவி700-இன் அனைத்து விதமான வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு வந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 4-இல் இருந்து 6 மாதங்களுக்குள் வழங்கப்பட்டுவிடுமாம். இந்த நீக்கம் மற்றும் பின்னர் சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் காரை வாங்கும்போது கட்டாயமாக வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

இந்தியாவில் தற்சமயம் நீண்ட மாதங்களுக்கு காத்திருப்பு காலத்தை கொண்டுள்ள பயணிகள் காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700 விளங்குகிறது. தற்போது மஹிந்திரா கையில் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் இந்த எஸ்யூவி காரின் டெலிவிரிகளை துரிதப்படுத்தும். ஆனால் உண்மையில் இது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, இந்த குறிப்பிட்ட காலத்தில் எக்ஸ்யூவி700 -ஐ வாங்கும் வாடிக்கையாளர்களை டீலர்கள் மீண்டும் மீண்டும் சந்தித்த வண்ணம் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, மஹிந்திராவின் இந்த நீக்கம் மற்றும் பின்னர் சேர்ப்பு நடவடிக்கைகள் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பிடித்துவிடும் என கூறிவிட முடியாது. சில வாடிக்கையாளர்கள் அசவுகரியமாகவும், நேரம் விரயமாகவும் கருதலாம். இதனால் மஹிந்திரா பிராண்டின் நன்மதிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று குறையவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே கூறியதுதான், இத்தகைய நடவடிக்கைகளை மஹிந்திரா மட்டுமின்றி மற்ற கார் பிராண்ட்களும் கையாண்டு வருகின்றன.

இந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா க்ரூப்பின் குஷாக் மற்றும் டைகுன் எஸ்யூவி கார்களில் இதே சிப்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி தன்னிச்சையாக மடங்கக்கூடிய, பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் (ORVMs) நீக்கி கொள்ளப்பட்டு இருந்தன. குறைக்கடத்திகளுக்கான தேவை சரியானவுடன் இந்த ORVMs கூடுதல் ஆக்ஸஸரீயாக தங்களது டீலர்ஷிப் மையங்களில் கிடைக்கும் என இந்த கூட்டணி நிறுவனங்களில் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகள் பலவற்றில் சீராகி வருகிறது என்றாலும், தற்சமயம் நடைபெற்றுவரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் குறைக்கடத்திகள் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. இதனால் முன்பு நாம் நினைத்திருந்ததை விட இந்த நிலைமை சீராகுவதற்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம். அதாவது, வாகன உற்பத்தி பணிகள் இந்தியா மட்டுமின்றி, உலகளவில் வேகம் குறையும்.

ஆனால் உண்மையில் இவ்வாறு புதிய வாகனங்களின் உற்பத்தி பணிகள் தாமதமாகுவது, செகண்ட்-ஹேண்ட் கார் மார்க்கெட்டிற்கு அனுகூலமாக உள்ளது. ஏனெனில் இந்த மார்க்கெட்டில் காத்திருப்பு காலமே கிடையாது அல்லவா... இதனால் உடனடியாக காரை வாங்க நினைப்பவர்களின் கவனம் செகண்ட்-ஹேண்ட் கார்களின் பக்கம் சாய்ந்து வருகிறது. சிப்கள் அதிகம் தேவைப்படும் பாகங்கள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருவதால், புதிய கார்களுக்கான காத்திருப்பு காலம் குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








