இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... அதிக பாதுகாப்புடன் களமிறங்கும் மாருதி கார்... டாடாவுக்கே சவால்!
புதிய மாருதி சுஸுகி பலேனோ காரின் அறிமுக விபரம் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது பலேனோ காரை பல்வேறு விதங்களில் மேம்படுத்தியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட 2022 மாருதி சுஸுகி பலேனோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி பணிகள் கூட தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் இந்த கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த கேள்விக்கு நமக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இதன்படி 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் வரும் பிப்ரவரி 10ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி வரும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ திகழ்ந்து வருகிறது. இருப்பினும் இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த போட்டியை சமாளிக்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ் போன்ற கார்களுக்கு புதிய மாருதி சுஸுகி பலேனோ விற்பனையில் மிக கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தற்போது விற்பனையில் இருந்து வரும் பழைய மாடலை போலவே, 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் சவாலான விலையை நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ கார் இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் ஏற்று கொள்ளப்பட்ட கார்களில் இதுவும் ஒன்று. இதன் காரணமாக தற்போது வரை 1 மில்லியனுக்கும் அதிகமான மாருதி சுஸுகி பலேனோ கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது மாருதி சுஸுகி பலேனோ காருக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த சூழலில் புதுப்பிக்கப்பட்ட புதிய மாடல் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பகுதியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி புதிய ஹெட்லேம்ப்கள், க்ரில் அமைப்பு, பம்பர், பனி விளக்குகள் அறை, மாற்றியமைக்கப்பட்ட பானெட் கட்டமைப்பு ஆகியவை 2022 மாருதி சுஸுகி பலேனோ காரின் முன் பகுதியில் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின் பகுதியை பொறுத்தவரை புதிதாக டிசைன் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் அப்டேட் செய்யப்பட்ட டெயில்கேட் மற்றும் பம்பர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்டீரியரை பொறுத்தவரை, புதிய டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மேம்படுத்தப்பட்ட செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பல்வேறு கண்ட்ரோல்களுடன் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீலும் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், புதிய ஏசி வெண்ட்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக மாருதி சுஸுகி கார்களின் கட்டுமான தரம் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை தகர்க்கும் வகையில் 2022 மாருதி சுஸுகி பலேனோ சிறப்பான கட்டுமான தரத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் செயல்திறனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தற்போது உள்ள 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் ஆகிய இன்ஜின் தேர்வுகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications