40 வருஷமா நின்னு விளையாடும் மாருதி! ஒரே அறிவிப்பில் உலகையே திரும்பி பாக்க வெச்சுட்டாங்க! இந்தியாவுக்கே பெருமை!
மாருதி சுஸுகி நிறுவனம் ஒரே அறிவிப்பில் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற மகுடத்தை, மாருதி சுஸுகி தனது தலையில் கம்பீரமாக சுமந்து கொண்டுள்ளது. மாருதி சுஸுகி அளவிற்கு வேறு எந்தவொரு நிறுவனத்தாலும் இங்கு கார்களை விற்பனை செய்ய முடியவில்லை. இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை குறைவான விலையில் விற்பனை செய்வதும், அந்த கார்கள் மைலேஜை வாரி வழங்குவதும் மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுவது, உதிரி பாகங்கள் எளிமையாக கிடைப்பது என இதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த சூழலில், கார்கள் உற்பத்தியில் மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் ஒன்றை கடந்திருப்பதாக மாருதி சுஸுகி தற்போது அறிவித்துள்ளது. 2.50 கோடி கார்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல். 2.50 கோடி கார்களை உற்பத்தி செய்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் இதன் மூலம் மாருதி சுஸுகி பெற்றுள்ளது.

உண்மையில் ஒரு நிறுவனம் 2.50 கோடி கார்களை உற்பத்தி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் தொழிற்சாலையை கடந்த 1983ம் ஆண்டு குருகிராமில் அமைத்தது. இதன்பின் மனேசரிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைத்தது. இந்த 2 தொழிற்சாலைகளும் ஹரியானா மாநிலத்தில்தான் அமைந்துள்ளன.

இந்த 2 தொழிற்சாலைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2.50 கோடி கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் மாருதி 800, ஆம்னி போன்ற பல்வேறு புகழ் பெற்ற கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ஒட்டுமொத்தமாக 16 மாடல்களை மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியாவில் அரேனா மற்றும் நெக்ஸா என 2 வகையான டீலர்ஷிப்களின் வாயிலாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதுடன், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இத்தனை நாடுகளின் சாலைகளில் இயங்கி கொண்டிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றுதான்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஆல்டோ, செலிரியோ, ஸ்விஃப்ட், பலேனோ, எஸ் - பிரெஸ்ஸோ, வேகன் ஆர், பிரெஸ்ஸா, க்ராண்ட் விட்டாரா, டிசையர், சியாஸ், எர்டிகா, எக்ஸ்எல்6, ஈக்கோ மற்றும் இக்னிஸ் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்திற்குமே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

எனவேதான் மாருதி சுஸுகி நிறுவனத்தால், 2.50 கோடி கார்களை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் ரக கார்களில் மிக அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள க்ராண்ட் விட்டாரா, ஹைப்ரிட் கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெகு சமீபத்தில்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மறு பக்கம் மாருதி சுஸுகி நிறுவனம் தனது பல்வேறு கார்களில் சிஎன்ஜி வெர்ஷன்களையும் விற்பனை செய்து வருகிறது. பலேனோ மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதற்கு அடுத்தபடியாக பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் வெகு விரைவிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications