உலகளவில் மாருதி சுஸுகி கார்களுக்கு இவ்வளவு மவுசா!! 2021இல் புதிய உச்சத்தை தொட்ட மாருதி கார்களின் ஏற்றுமதி!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி இதுவரையில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் அடைந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் பிராண்டாக விளங்குகிறது. அதிலிலும் குறிப்பாக, பயணிகள் கார்கள் விற்பனையில் மாதந்தோறும் அதிக எண்ணிக்கையை பதிவு செய்து முதலிடத்தில் உள்ள நிறுவனமாகும். மேலும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அதிகளவில் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் மாருதி சுஸுகி விளங்குகிறது.

இத்தகைய கூட்டணி ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கடந்த ஜன.3ஆம் தேதி மாருதி சுஸுகி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 2,05,450 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குமுன் மாருதி சுஸுகி நிறுவனம் எந்தவொரு ஆண்டிலும் இந்த அளவிற்கு அதிகமான ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கையை பதிவு செய்தது இல்லை. கார்கள் ஏற்றுமதியில் இத்தகைய மைல்கல்லை அடைந்திருப்பது குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான கெனிசி அயுகவா கருத்து தெரிவிக்கையில், "உலகம் முழுவதிலும் இந்திய தயாரிப்புகளை கொண்டுச்செல்ல வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நோக்கத்திற்கு மாருதி சுஸுகி அர்ப்பணிக்கப்பட்டது.

எங்கள் கார்களின் தரம், தொழிற்நுட்பம், நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் செலவு திறன் ஆகியவற்றில் உலகம் முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இந்த மைல்கல் பிரதிப்பலிக்கிறது. தற்போதைய சவாலான நேரத்திலும் தொடர்ந்து தொடர்பையும், ஆதரவையும் வழங்குவதற்காக எங்களது தாய் நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பிரேஷன் மற்றும் உலக சந்தைகளில் உள்ள அதன் விநியோகஸ்தர்களுக்கு நன்றியை கூறிக்கொள்கிறோம்.

உலக வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய இடத்தில் நிற்பதில் நிறுவனம் உறுதியாக இருக்கிறது. அவர்களை தொடர்ந்து மகிழ்விப்போம்" என்றார். இந்தியாவில் இருந்து தற்போதைக்கு 15 மாடல்களை மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்து வருகிறது. ஜப்பான் நாட்டு சந்தையில் பிரபலமான சுஸுகியின் ஆஃப்-ரோடு வாகனமாக விளங்கும் ஜிம்னியை தயாரிக்கும் பணிகள் இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலைகளில் சமீபத்தில் தான் துவங்கின.

இந்த 15 மாடல்களில் ஜிம்னியும் ஒன்றாகும். ஜிம்னி இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலும் மஹிந்திரா தார், ஃபோர்ஸ் குர்கா உள்ளிட்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களுக்கு போட்டியாக விற்பனையை துவங்கவுள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாருதி கார்களில் சமீபத்திய அறிமுகமான புதிய தலைமுறை செலிரியோ காரும் ஒன்றாகும்.

மாருதி சுஸுகி அதிகளவில் ஏற்றுமதி செய்யும் மாடல்களாக பலேனோ, டிசைர், ஸ்விஃப்ட், எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்டவை விளங்குகின்றன. வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முதன்முதலாக 1986-87ஆம் ஆண்டுகளில் மாருதி சுஸுகி துவங்கியது. முதற்கட்டமாக ஹங்கேரிக்கு அதிக எண்ணிக்கையிலான கார்களை இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் ஏற்றுமதி செய்தது.

தற்சமயம் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு மாருதி சுஸுகி கார்கள் செல்கின்றன. இன்றைய தேதி வரையில் வெளிநாட்டு சந்தைகளுக்கென மட்டும் 21.85 லட்சத்திற்கும் அதிகமான கார்களை இந்தியாவில் தயாரித்து மாருதி சுஸுகி அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆசியா, ஆப்பிரிக்கா, மேற்காசிய நாடுகள் மற்றும் நமது அண்டை நாடுகளிலும் மாருதி சுஸுகி வாகனங்களுக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்த மொத்த 2,05,450 வாகனங்களில் கிட்டத்தட்ட 22,280 யூனிட்களின் ஏற்றுமதி கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அதிகப்பட்ச வாகனங்களின் எண்ணிக்கை இதுவாகும். இருப்பினும் இந்த நிறுவனத்தின் கடந்த மாத உள்நாட்டு பயணிகள் கார்கள் விற்பனை எண்ணிக்கை 2020 டிசம்பரை காட்டிலும் 13% குறைந்துள்ளது.

கடந்த டிசம்பரில் மாருதி சுஸுகி உலகளவில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1,53,149 யூனிட்களாகும். அதாவது இதில் பயணிகள் கார்கள் உள்பட கமர்ஷியல் வாகனங்களும் அடங்குகின்றன. ஆனால் 2020 டிசம்பர் மாதத்தில் வெறும் பயணிகள் கார்களை மட்டுமே 1.50 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.


Click it and Unblock the Notifications








