ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்... வீட்டிற்கு உடனே மாருதி காரை எடுத்துட்டு போலாம்.. ஆனா ஒரு விஷயம்!
மாருதி நிறுவனம் இந்தியாவில் தனது சப்ஸ்கிரிப்ஷன் வழங்கும் நகரங்களை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பணம் கட்டாமலேயே மாத வாடகையில் காரை வாங்க முடியும். இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இன்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரது கனவு, அதற்காகப் பலர் சிறுக சிறுக சேமிக்கப் பழகிக்கொள்வார்கள். இருந்தாலும் சிலருக்குப் பொருளாதார பிரச்சனைகள் கார் வாங்குவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும். சிலர் காரை அடிக்கடி மாற்றும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கும் சொந்தமாக கார் வாங்கி அதை விற்பனை செய்வதிலும் சில சிக்கல்கள் மற்றும் பண நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்குத் தீர்வாகப் பல தயாரிப்பு நிறுவனங்கள் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் கார்களை விற்பனை செய்கின்றனர். இந்த சப்ஸ்கிரிப்ஷன் ஒரு காரை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை மாறாக, காரை வாடகைக்கு எடுப்பது போலச் செயல்படும். இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனமே வழங்குகிறது.

அதன்படி குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாடிக்கையாளர் காருக்கான எந்த முன் பணமும் செலுத்தாலும் குறிப்பிட்ட மாதத்திற்கு ஒப்பந்தம் போட்டு காரை வாங்கிக்கொள்ளலாம். அந்த காருக்கான மாத வாடகையை அந்நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும்.

மாருதி சுஸூகி நிறுவனம் இந்த திட்டதை ஏற்கனவே டில்லி, குர்கான், நொய்டா, காஸியாபாத், ஃபரிதாபாத், பெங்களூரு, ஐதிராபாத்,புனே, மும்பை, நவி மும்பை, தானே, சென்னை, ஆமதாபாத், காந்திநகர், ஜெய்பூர், இந்தூர், மங்களூரு, மைசூரு, கொச்சி, கொல்கத்த ஆகிய நகரங்களில் நடத்தி வருகிறது. தற்போது இந்த திட்டத்தை இந்நிறுவனம் சண்டிகர், லூதியானா, லக்னோ, நாக்பூர், மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது.

இந்த சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கினால் காருக்கான விலை, பதிவு கட்டணம், வாகன பராமரிப்பு மற்றும் சர்வீஸ், இன்சூரன்ஸ், இன்சூரன்ஸ் ரினீவல் மற்றும் ரோடு சைடு அசிஸ்டென்ஸ் ஆகியவற்றிற்குப் பணம் கட்ட தேவையில்லை மாறாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தொகையை வாடகையை மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு செலுத்தவேண்டும். ரூ11,500 முதல் இந்த சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் துவங்குகிறது. இது தேர்வு செய்யப்படும் கார் மற்றும் ஒப்பந்த காலத்தைப் பொருத்து மாறுபடும்.

இந்த சப்ஸ்கிரிப்ஷனுக்கான ஒப்பந்தம் முடிவடையும் போது அந்த வாடிக்கையாளர் புதிய காரை மாற்றி புதிய ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். அல்லது அவர் பயன்படுத்தி வரும் காரை குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி அவருக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

அதே போல ஒப்பந்த காலத்திற்கு முன்பே ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு காரை திரும்ப நிறுவனத்திடமே ஒப்படைக்கும் ஆப்ஷனும் இதில் இருக்கிறது.இந்த திட்டத்தின்படி காரை வாங்குபவர்களின் பெயரிலேயே கார் பதிவு செய்து கொடுக்கப்படும்.

இப்படியாக ஒப்பந்த அடிப்படையில் காரை வாங்கினால், அந்த காரை பயன்படுத்தும் போது கார் ரிப்பேர் ஆனால் அந்த காரை மாருதி சர்வீஸ் சென்டரில் இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம். அதே போல கார் விபத்தில் சிக்கினாலும் காருக்கான பணத்தை முழுமையாக இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் கார் கம்பெனியே பெற்றுக்கொள்ளும். இதனால் வாடிக்கையாளருக்கு எந்த விதமான டென்ஷனும் கிடையாது.

மாருதி நிறுவனம் இந்த காருக்கு ORIX, ALD ஆட்டோமோட்டிவ், க்விக்லீஸ், மற்றும் மைலீஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த திட்டத்தை மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 2020 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.

அப்பொழுது முதல் இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இதை பல்வேறு நகரங்களுக்கு இந்நிறுவனம் ஒவ்வொரு கட்டமாக விரிவாக்கிக்கொண்டே வருகிறது.


Click it and Unblock the Notifications