அனைத்து கண்களும் மாருதியை நோக்கி... நாளை அறிமுகம் ஆகும் புத்தம் புதிய கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு!
புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் நாளை பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த போட்டியை அதிகரிக்கும் வகையில், நாளை புதிய கார் ஒன்று வெளியிடப்படவுள்ளது. புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் இந்தியாவில் நாளை பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. இது மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டிற்கு வரவுள்ள புதிய கார் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, பல்வேறு கார்களுடன் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போட்டியிடவுள்ளது.

இதில், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டாடா ஹாரியர் (Tata Harrier), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்கள் குறிப்பிடத்தக்கவை. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில், 3 கார்கள் இந்த செக்மெண்ட்டிற்கு புதியதாக வந்தவை.

அவை ஸ்கோடா குஷாக், எம்ஜி அஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவை ஆகும். இதில், ஸ்கோடா குஷாக் கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து எம்ஜி அஸ்டர் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு இடையே கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இப்படி பல்வேறு புதிய கார்கள் இந்த செக்மெண்ட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரும் போட்டியில் குதிக்கவுள்ளது. புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரில், மைல்டு-ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் சிஸ்டத்துடன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அதே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 'ஆல்க்ரிப்' சிஸ்டத்தையும் புதிய கிராண்ட் விட்டாரா கார் பெற்றிருக்கும். டிசைனை பொறுத்தவரையில், இந்த காரின் முன் பகுதியில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டிருக்கும்.

அத்துடன் புதிய க்ரில் அமைப்பு, கார் பாடியின் நிறத்திலேயே ஓஆர்விஎம்கள், கருப்பு நிற மேற்கூரை, புதிய ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் ஆகியவையும் புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரில் இடம்பெற்றிருக்கலாம். அதேபோன்று மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி காரில் வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

இதன்படி பனரோமிக் சன்ரூஃப் வசதியை மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா பெற்றிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் சன்ரூஃப் வசதி இருக்காது. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. சன்ரூஃப் வசதிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களில் அதனை வழங்க தொடங்கியுள்ளது.

பனரோமிக் சன்ரூஃப் தவிர, 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளையும் புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை பற்றிய பல்வேறு அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு நாளை கிடைத்து விடும்.

முன்னதாக டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில் புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்தான். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதுதவிர ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. பல்வேறு புதிய கார்கள் வரவுள்ளதன் காரணமாக இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் வரும் மாதங்களில் போட்டி இன்னும் மிகவும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








