இவ்ளோ ஏத்திட்டாங்களா? சொன்னபடியே விலை உயர்த்திய மாருதி சுசுகி... எத்தன சதவீதம் ஏத்தி இருக்காங்க தெரியுமா?
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki) அதன் அனைத்து தயாரிப்புகளின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் கார்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனம் கடந்த டிசம்பர் மாதமே புதிய கார்களின் விலையை 2022 ஜனவரியில் இருந்து உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், எவ்வளவு விலை உயர்வு செய்யப்படும் என்பது பற்றிய தகவலை அது வெளியிடவில்லை.

இந்த நிலையிலேயே, நிறுவனம் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (BSE) செய்த ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றின் வாயிலாக எவ்வளவு விலை உயர்வை செய்திருக்கின்றது என்கிற தகவல் தெரிய வந்திருக்கின்றது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுசுகி அனைத்து மாடல்களின் விலையிலும் 1.7 சதவீதம் வரை உயர்வை செய்திருக்கின்றது.

இந்த புதிய விலை உயர்வானது தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மாட்டு பொங்கல் (ஜனவரி 15, 2022) தினத்தில் இருந்து நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த அதிரடி விலை உயர்வு இந்தியர்கள் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக, புத்தாண்டின் முதல் மாதத்தை புதிய காரைக் கொண்டு கொண்டாட திட்டமிட்டிருந்தோர் மத்தியில் விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. கார் உற்பத்திக்கான கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி மாருதி சுசுகி நிறுவனம் விலை உயர்வைச் செய்திருக்கின்றது.

இதே காரணத்தைக் காட்டி இந்தியாவில் பல முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் கார்களை விலையை உயர்த்தி இருக்கின்றனர். டாடா மோட்டார்ஸ், கியா, ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்திவிட்டன. இந்த நிலையிலேயே 1.7 சதவீத விலை உயர்வை மாருதி சுசுகி செய்திருக்கின்றது.

இந்த விலை உயர்வு அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலை சுமையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் மாருதி சுசுகி நிறுவனம் விலை உயர்வு பற்றி அறிவிப்பது கடந்த ஆறு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். சென்ற 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் 1.9 சதவீதம் வரை விலை உயர்வைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுசுகி நிறுவனம் தற்போது சிப் பற்றாக்குறை பிரச்னையை சந்தித்து வருகின்றது. இதனால் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 85 சதவீதத்திற்கும் குறைவாக உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,60,226 யூனிட் வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டன. ஆனால், 2021 டிசம்பரிலோ நிறுவனம் 153,149 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. ஆகையால், நிறுவனம் உற்பத்தி திறன் மட்டுமல்ல விற்பனையும் பல மடங்கு சரிந்துக் காணப்படுகின்றது.

மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் எட்டு புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் திட்டத்தை வகுத்திருக்கின்றது. சென்ற ஆண்டுகளில் இழந்த விற்பனையை புதிய மாடல்களின் வாயிலாக பிடிக்கும் பொருட்டு அவற்றை வரிசையாகக் களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புதிய தயாரிப்புகளை பெரியளவில் அறிமுகம் செய்யவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் தகவல் சென்ற ஆண்டை போல் நடப்பு 2022ம் ஆண்டு இருக்காது என்பதை தெரியப்படுத்துகின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி நடப்பு 2022ம் ஆண்டில் சில கார் மாடல்களை அப்கிரேட் செய்தும், இத்துடன், சில புதுமுக வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








