கார் முழுசா தண்ணீருல மூழ்கிடுச்சா! கவலைய விடுங்க... மாருதியின் இந்த திட்டம் உங்க காரின் எஞ்ஜினை பாதுகாக்கும்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு ஓர் புதிய திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவையை வழங்கும் விதமாக ஓர் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'வாடிக்கையாளர் வசதி தொகுப்பு' (Customer Convenience Package) எனும் திட்டத்தையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

இந்த திட்டம் ஹைட்ரோஸ்டேடிக் மற்றும் எரிபொருள் கலப்படம் காரணமாக எஞ்ஜினில் ஏற்படும் எதிர்பாராத சிக்கல்களுக்கு தீர்வு காண உதவும். அதாவது, காப்பீட்டு திட்டத்தை போன்று இந்த திட்டம் செயல்படும். காப்பீடு திட்டமானது, ஓர் வாகனம் விபத்து போன்ற கசப்பான நிகழ்வுகளைச் சந்திக்கும் எனில் அப்போது ஏற்படும் இழப்புகளைச் சரி செய்ய உதவுகின்றது.

இதைப்போலவே, தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் வாடிக்கையாளர் வசதி தொகுப்பு திட்டமும் செயல்பட இருக்கின்றது. இந்த திட்டத்தை மூன்று விதமான பேக்கேஜ்களில் மாருதி கார் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும். சிபி ஹைட்ரோ, சிசிபி ஃப்யூவல் மற்றும் சிசிபி ஃப்ளஸ் ஆகியவையே அவை ஆகும்.

சிசிபி ஹைட்ரோ பேக்கேஜ்:
எஞ்ஜின் தண்ணீரால் ஏதேனும் பாதிப்பைச் சந்திக்கும் எனில் சிசிபி ஹைட்ரோ பேக்கேஜின்கீழ் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். நம் நாட்டில் பருவ மழை எப்போது வெளுத்து வாங்கும்?, எப்போது பொய்த்து போகும் என்பது யாரும் அறியாத ஒன்றாக இருக்கின்றது. கடந்த காலங்களில் கொட்டி தீர்த்த மழையால் நாட்டின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கின்றன.

இந்த மாதிரியான நேரங்களில் நகரங்கள் மட்டுமல்ல வாகனங்களும் நீரில் மூழ்கும் நிலை உருவாகுகின்றது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலை வாகனங்களை மிகுந்த பாதிப்புக்கு ஆளாக்கிவிடும். குறிப்பாக, எஞ்ஜின் தோல்வி போன்ற மிகுந்த செலவீணத்தை வழங்கக் கூடிய பிரச்னைகள் எல்லாம் ஏற்படும். இத்தகைய செலவீணத்தைத் தவிர்ப்பதற்கே சிசிபி ஹைட்ரோ பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிசிபி ஃப்யூவல் பேக்கேஜ்:
எரிபொருள் கலப்படத்தின் காரணமாகவும் சில நேரங்களில் எஞ்ஜின் ஃபெயிலியர் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இதுமட்டுமின்றி, சில நேரங்களில் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் கவனக் குறைவால் பெட்ரோல் வாகனத்தில் டீசலும், டீசல் வாகனத்தில் பெட்ரோல் என மாற்றி செலுத்துவதன் காரணத்தினாலும் மோட்டார் தோல்வு நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

இத்தகைய நேரங்களில் ஏற்படும் எஞ்ஜின் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்காகவே சிசிபி ஃப்யூவல் பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீரால் ஏற்படும் சிக்கலை போலவே எரிபொருள் கலப்படத்தினால் உருவாகும் எஞ்ஜின் கோளாறுகளும் மிக மிக அதிக செலவீணத்தை வழங்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தலைவலியில் இருந்து மாருதியின் சிசிபி ஃப்யூவல் பேக்கேஜ் நிச்சயம் அதன் வாடிக்கையாளர்களைக் காக்கும்.

சிசிபி ப்ளஸ்:
சிசிபி ஹைட்ரோ மற்றும் சிசிபி ஃப்யூவல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே சிசிபி ப்ளஸ் பேக்கேஜ். இந்த பேக்கேஜை பெற்ற ஓர் நபர், நீர் அல்லது எரிபொருள் கலப்படம் என இரண்டில் எதன் வாயிலாக சிக்கலைச் சந்தித்தாலும் கவலையே இல்லாமல் சிசிபி ப்ளஸ்-ஐ பயன்படுத்தி தங்களின் வாகனத்தை சரி செய்து கொள்ள முடியும்.

மாருதி சுஸுகியின் அரேனா மற்றும் நெக்ஸா ஆகிய இரு சேனல்களில் விற்கப்படும் கார்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், வாகனம் வாரண்டி காலத்தில் அல்லது கூட்டப்பட்ட வாரண்டியைக் கொண்டிருத்தல் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. அதாவது, வாரண்டி காலாவதியான கார்களுக்கு இந்த திட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.

சிறப்பு திட்டத்தை வாங்குபவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் தங்களின் கார்களை சரி செய்து கொள்ள முடியும். அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் இதற்காக ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி கார்கள் மீது அதிக நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இப்புதிய திட்டத்தின் வருகை அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் இன்னும் பல மடங்கு வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்க இந்த திட்டம் உதவும் எனவும் நம்பப்படுகின்றது. புதிய திட்டத்தை மாருதி சுஸுகி விற்பனையாளர்களிடம் அல்லது அதிகாரப்பூர்வ வலை தள பக்கத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








