நீங்க இந்த செய்தியைப் படித்து முடிக்கும் முன்பு மாருதி சுஸூகி நிறுவனம் 4 கார்களை உற்பத்தி செய்திருக்கும்....
மாருதி சுஸூகி நிறுவனத்தைப் பொருத்தவரை கடந்த மே மாத உற்பத்தி கடந்த 2021 மே மாத உற்பத்தியை ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகமாகியுள்ளது.தற்போது அந்நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு 4 கார்களை தயாரித்து வருகிறது. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார்களின் பட்டியலை எடுத்தால் அதில் அதிகமான கார்களை கொண்ட நிறுவனம் மாருதியாகத் தான் இருக்கும். இந்திய மக்களின் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்ப கார்களை உருவாக்குவதில் மாருதியை அடித்துக்கொள்ள முடியாது. மக்களுக்கு ஏற்ற குறைவான பட்ஜெட்டில் நிறைவான கார்களை மாருதி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அமைதியாக ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த மே மாதம் மாருதி நிறுவனம் ஒட்டு மொத்தமாக 1,60,459 கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஒரே மாதத்தில் இவ்வளவு கார்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. இதுவே கடந்த 2021 மே மாதத்தை ஒப்பிடும் போது வெறும் 40,628 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. இந்த ஒரே ஆண்டில் உற்பத்தி கிட்டத்தட்ட 4 மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் மினி, காம்பேக்ட், மிட்சைட், யூட்டிலிட்டி ஆகிய செக்மெண்ட்களில் கார்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது.

அதன்படி மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட்டை பொருத்தவரை மொத்தம், 1,11,009 கார்களை உற்பத்தி செய்துள்ளது. இதே செக்மெண்டில் கடந்த 2021 மே மாதம் வெறும் 30,026 கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. இந்த செக்மெண்டில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸொ, செலிரியோ, ஸிவிஃப்ட், வேன்ஆர் ஆகிய கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. அடுத்தாக மிட் சைஸ் செக்மெண்ட்டை பொருத்தவரை இந்நிறுவனம் சியாஸ் என்ற ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்கிறது.

மிட்சைஸ் செக்மெண்டில் அந்நிறுவனம் மொத்தம் 1817 கார்களை கடந்த மே மாதம் உற்பத்தி செய்துள்ளது. இதுவே கடந்த 2021ம் வெறும் 534 கார்கள் மட்டுமே உற்பத்தியாகியிருந்தது. யூட்டிலிட்டி கார்களை பொருத்தவரை மொத்தம் 36,941 கார்கள் கடந்த மே மாதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2021 மே மாத உற்பத்தியைப் பொருத்தவரை மொத்தமே 9,106 வாகனங்கள் மட்டுமே உற்பத்தியாகியிருந்தன. இந்த செக்மெண்டில் மாருதி சுஸூகி நிறுவனம், எர்டிகா, எஸ்-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 ஆகிய கார்களை உற்பத்தி செய்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கார்கள் தயாரிப்பிற்கான சிப்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக நியான் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நியாஸ் கேஸ் தான் சிப்களை தயாரிக்கப் பயன்படும் முக்கியமாகப் பொருள் என்பதால் அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் மாருதி நிறுவனம் 1,60,459 கார்களை உற்பத்தி செய்துள்ள நிலையில் இந்நிறுவனம் கடந்த மே மாதம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 3.59 கார்களை ( 4 கார்கள்) தயாரித்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான தயாரிப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாத தயாரிப்பைக் கடந்த 2021 மே மாத தயாரிப்புடன் ஒப்பிடுவது சரி கிடையாது 2021 மே மாதம் இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அதிகமாகக் கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது கிட்டத்தட்ட முழுமையாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications