ஈகோ காரை பயன்படுத்துபவரா நீங்க?.. 19 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திரும்பி எடுத்து வர மாருதி அழைப்பு!
மாருதி சுஸுகி நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் தயாரித்த ஈகோ (Maruti Suzuki Eeco) கார் மாடல்களை திரும்பி எடுத்து வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்த அழைப்பு எதற்காக என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, குறிப்பிட்ட காலத்தில் தயாரித்த ஈகோ (Maruti Suzuki Eeco) கார் மாடல்களை சர்வீஸ் மையங்களுக்கு எடுத்து வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. காரின் பாதுகாப்பு விஷயத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை இந்த அழைப்பு நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றது.

ஆனால், தவறுதலாக அளவிடப்பட்ட வீல் ரிம்மின் அளவின் காரணத்தினாலயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி தொடங்கி அதே ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட ஈகோ கார் மாடல்களிலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றை சரி செய்யும் பொருட்டே மாருதி சுஸுகி தற்போது அழைப்பு விடுத்திருக்கின்றது. ஆகையால், பாதுகாப்பு விஷயத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பிட்ட கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களில் மட்டும் பிரச்னை இருப்பது சமீபத்திய வழக்கமான ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டிருக்கும் கோளாறை மாருதி சுஸுகி நிறுவனம் இலவசமாக சரி செய்ய இருக்கின்றது. இதற்கான அழைப்பை நிறுவனத்தின் சர்வீஸ் மையங்கள் ஈகோ உரிமையாளர்களை தனி தனியாக அழைப்பு விடுத்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வின்போது பிரச்னை இருக்கும் எனில் அவை உடனடியாக சரி செய்யப்பட்டு, மீண்டும் கார் உரிமையாளர்களிடத்தில் ஒப்படைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், ஈகோ உரிமையாளர்களும் தங்களின் ஈகோ பாதிப்புக்குள்ளாகிய கார்களில் ஒன்றா என்பதை 'இம்ப் கஸ்டமர் இன்ஃபோ' (IMP CUSTOMER INFO) நிறுவனத்தின் வலைதளப் பக்கத்தில் பேஜிற்கு சென்று பார்த்துக் கொள்ளவும் முடியும். இங்கு காரின் சேஸிஸ் எண்ணை உள்ளிடுவதன் வாயிலாக அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மாருதி சுஸுகி நிறுவனம் ஈகோ காரை இதுபோன்று அழைப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 2020ம் ஆண்டிலும் நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அப்போது, காரின் ஹெட்லேம்ப்பில் ஸ்டாண்டர்ட் சிம்பல் இருந்த காரணத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கோளாறானது 2019 நவம்பர் 4 தொடங்கி 2020 பிப்ரவரி 25 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட ஈகோ கார்களிலேயே கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 40,453 யூனிட்டுகள் இந்த பாதிப்பிற்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டு, அனைத்தும் சரி செய்யப்பட்டது. இந்த முறை வீல் அளவு பிரச்னை காரணமாக 19,731 யூனிட் ஈகோ கார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சுமார் 1.81 லட்சம் கார்களை மாருதி சுஸுகி அழைப்பு விடுத்திருந்தது.

பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு கொண்ட பிரஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் சியாஸ் உள்ளிட்ட கார் மாடல்களுக்கே நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. மோட்டார் ஜெனரேட்டர் கோளாறு இருப்பதாகக் கூறி இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. 2018 மே 4 தொடங்கி 27 அக்டோபர் 2020 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது.

மாருதி சுஸுகி நிறுவனம் மட்டுமில்லைங்க இதுபோன்று அழைப்புகளை இந்தியாவின் பிற முன்னணி நிறுவனங்களும் விட்டிருக்கின்றன. அந்தவகையில், மஹிந்திரா நிறுவனம் 600 யூனிட்டுகளுக்கான அழைப்பை விடுத்திருந்தது. 2021 ஜூன் 21 மற்றும் 2021 ஜூலை 2 ஆகிய கால கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட எக்ஸ்யூவி 300, பொலிரோ, ஸ்கார்பியோ மற்றும் தார் உள்ளிட்ட கார் மாடல்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் கோளாறு காரணமாக தங்கள் தயாரிப்புகளை திரும்பி எடுத்துமாறு அழைப்பு விடுப்பது இந்தியாவில் முதல் முறையல்ல. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான சில முக்கிய உதிரிபாகங்களை வேறு சில நிறுவனங்களிடம் இருந்தே பெற்று வருகின்றன.

சில நேரங்கள் வெளி நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருட்கள் இதுபோன்று பாதிப்புடன் காணப்படுகின்றன. இவற்றை சரி செய்வது என்பது வாகன உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. இருப்பினும், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவையை வழங்கும் பொருட்டு நிறுவனங்கள் தாமாக முன் வந்து அழைப்பு விடுத்து அவற்றை சரி செய்கின்றன.


Click it and Unblock the Notifications








