ஆயிரக்கணக்கான கோடியை கொட்ட போகும் மாருதி சுஸுகி கார் நிறுவனம்... எந்த மாநிலத்திற்கு இந்த அதிர்ஷ்டம் தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் ஹரியானா மாநிலத்தில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மாருதி சுஸுகி நிறுவனமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் முதற்கட்டமாக மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை மாருதி சுஸுகி நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அத்துடன் இது தொடர்பாக ஹரியானா மாநில அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வந்தது. ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு தற்போது 800 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹரியானா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இங்கு மாருதி சுஸுகி நிறுவனம் அமைக்கும் முதல் தொழிற்சாலை ஒரு ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இது வரும் 2025ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்காலத்தில் இந்த உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய விரும்பினாலும், அங்கு போதிய இடவசதி உள்ளது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மனேசரில் 2 தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகிறது.

இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் ஒன்றாக சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 2 மில்லியன் கார்களை, அதாவது 20 லட்சம் கார்களை மாருதி சுஸுகி நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர சுஸுகி மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று குஜராத் மாநிலத்தில் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த உற்பத்தி திறனை மேலும் அதிகரிப்பதற்காகவே, மாருதி சுஸுகி நிறுவனம் கூடுதல் முதலீடு மூலமாக புதிய தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய சந்தையில் எப்படிப்பட்ட வரவேற்பு உள்ளது? என்பதை இங்கே நாங்கள் விவரிக்க வேண்டியதில்லை. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்ந்து வருகிறது.

புதிய தொழிற்சாலையை அமைக்கும் அதே நேரத்தில் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது பிஸியாக உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் தொடங்கி தற்போது வரை தொடர்ச்சியாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்து கொண்டே உள்ளன.

புதிய தலைமுறை செலிரியோ, செலிரியோ சிஎன்ஜி, புதிய வேகன் ஆர், டிசையர் சிஎன்ஜி, புதிய பலேனோ, புதிய எர்டிகா, புதிய எக்ஸ்எல்6 என மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக தனது மாடல்களை அப்டேட் செய்து வருகிறது. இத்துடன் இது நிற்க போவதில்லை. இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா, புதிய தலைமுறை ஆல்டோ, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு வரவுள்ளன.

இதில், புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் புதிய தலைமுறை ஆல்டோ ஆகிய கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுதவிர நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் கார்களின் சிஎன்ஜி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதன்படி மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் சிஎன்ஜி மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதை தொடர்ந்து மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனான டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த தகவல் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications