விலை குறைவான ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வேகன்ஆர் வெளியீடு! இனி மாருதியோட இடத்தை யாராலும் தொடகூட முடியாது!
மாருதி சுஸுகி நிறுவனம் ப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வேகன்ஆர் காரை வெளியீடு செய்து உள்ளது. இந்த சிறப்புமிக்க காரை மத்திய அமைச்சர் ஒருவரே அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு பற்றியும், காரின் சிறப்புகள் பற்றியும் விரிவான தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகியின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்று வேகன்ஆர். இது ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். இதுவே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகும். இந்தியாவின் நம்பர் 1 செல்லிங்க கார் மாடலும் இதுவே ஆகும். இந்த காரின் எஞ்ஜினிலேயே கணிசமான மாற்றங்களை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வகையில் அக்காரின் மோட்டாரில் நிறுவனம் மாற்றத்தை மேற்கொண்டிருக்கின்றது.

ஆகையால், இந்த வேகன்ஆர் 'இ20' மற்றும் 'இ85' இரு விதமான ஃப்யூவலிலும் இயங்கும் திறன் கொண்டதாக மாறியிருக்கின்றது. இத்தகைய சூப்பரான மாற்றத்தைப் பெற்றிருக்கும் வேகன்ஆர் காரையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி வெளியீடு செய்தார். தலைநகர் டெல்லியில் எத்தனால் ஏற்பு மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் குறித்து நடைபெற்ற நிகழ்விலேயே இந்த காரின் வெளியீட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டது.
அதிகளவில் எத்தனால் கலக்கப்பட்டாலும் இயங்கும் திறன் கொண்டதே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எஞ்ஜினின் திறன் ஆகும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், 80 சதவீதம் பெட்ரோல் - 20 எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் அல்லது 15 சதவீதம் பெட்ரோல் - 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் என எதுவாக இருந்தாலும் இந்த மோட்டாரால் இயங்க முடியும். தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்த மாருதி சுஸுகி வேகன்ஆர் 20 சதவீதம் (இ20) தொடங்கி 85 சதவீத (இ85)-த்திற்கு இடைப்பட்ட எந்த எத்தனால் - பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருளிலும் இயங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோலிலும் எத்தனால் கலக்கப்படுகின்றது. ஆனால் அது மிக மிக குறைவான அளவிலேயே கலக்கப்படுகின்றது. இதை மாற்றும் விதமாகவே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் அரசு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதன் வாயிலாக நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை குறைக்க முடியும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும். மேலும், பெட்ரோலுக்காக பிற நாடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதையும் தவிர்க்க முடியும்.
எனவேதான் மத்திய அரசு விரைவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை கட்டாயமாக்க இருக்கின்றது. எத்தனாலை உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்க முடியும். விவசாய கழிவுகளில் இருந்து இதை பெறலாம். ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோலைக் காட்டிலும் பலமடங்கு குறைவான விலையில் இந்த எரிபொருள் விற்பனைக்குக் கிடைக்கும். அதுமட்டுமில்லைங்க, வழக்கமான பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்கள் மிக குறைவான மாசை வெளியேற்றும் என கண்டறியப்பட்டுள்ளது.
வேகன்ஆர் காரில் பயன்படுத்தப்படும் மோட்டாரை ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்குவதற்காக இரு விதமான மாற்றங்களை நிறுவனம் செய்திருக்கின்றது. இதுவே எஞ்ஜினை சீராக இயங்க உதவுகின்றது. சுஸுகி ஜப்பான் உடன் இணைந்தே மாருதி சுஸுகி இந்த வடிவமைப்பை மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்6 - II உமிழ்வு விதிக்கு இணக்கமாகவும் இந்த மோட்டாரை நிறுவனங்கள் வடிவமைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
புதிய ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மோட்டார் கொண்ட வேகன்ஆரின் வெளியீடு குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி அகாடமி கூறியதாவது, "நாட்டின் எண்ணெய் இறக்குமதி சுமையை குறைப்பதையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கிலும் இந்த வாகனத்தை மாருதி உருவாக்கியிருக்கின்றது. சுஸுகி ஜப்பானின் ஆதரவுடன் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே இந்த கார்" என தெரிவித்தார். ஆகையால், இந்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இந்த கார் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.
ஃப்ளெக்ஸி ஃப்யூவல் கொண்ட வேகன்ஆர் என்ன மாதிரியான திறனை வெளியேற்றும், எவ்வளவு மைலேஜை வழங்கும் என்பது போன்ற முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதேபோல், இந்த காரை எப்போது நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வழக்கமான பெட்ரோல் வேகன்ஆர் உடன் ஒப்பிடுகையில் இதன் எக்சாஸ்ட் 79 உமிழ்வை குறைத்து வெளியிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஃப்ளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் கார் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.


Click it and Unblock the Notifications








