வெறும் 3 மாதங்களில் 4 ஆயிரம் பென்ஸ் கார்கள் விற்பனை!! இந்தியாவில் தொடரும் மெர்சிடிஸின் ஆதிக்கம்!
இந்தியாவின் முன்னணி லக்சரி கார் பிராண்டாக விளங்கும் மெர்சிடிஸ்-பென்ஸில் இருந்து நடப்பு 2022ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 4 ஆயிரம் லக்சரி கார்களை இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 4,022. கடந்த 10 வருடங்களில் இந்த ஜெர்மன் லக்சரி பிராண்ட் இந்திய சந்தையில் ஒரு காலண்டர் ஆண்டில் முதல் காலாண்டில் விற்பனையில் 4 ஆயிரத்தை கடப்பது இது 2வது முறையாகும்.

இதற்குமுன் 2018ஆம் ஆண்டில் முதல் 3 மாதங்களில் 4,556 யூனிட் பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் 4,022 என்கிற எண்ணிக்கை சற்று குறைவுதான். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,193 யூனிட் கார்களையே மெர்சிடிஸ்-பென்ஸால் இந்தியாவில் விற்பனை செய்ய முடிந்தது.

இதனுடன் ஒப்பிடுகையில் கடந்த 3 மாதங்களில் கிட்டத்தட்ட 829 கார்கள், அதாவது 25.96% அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பான்மையான ஆண்டுகளில் முதல் காலாண்டில் 3 ஆயிரம்- 4 ஆயிரம் விற்பனை எண்ணிக்கையையே மெர்சிடிஸ்-பென்ஸ் பதிவு செய்துள்ளது. இருப்பினும் சில ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையும் பதிவாகியுள்ளன.

குறைந்தப்பட்சமாக, 2013இல் வெறும் 2,009 கார்களையே முதல் 3 மாதங்களில் மெர்சிடிஸ் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த 2020ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 2,386 மெர்சிடிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்சமயம் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவிற்கு அடங்கிவிட்டது என்றாலும், குறை-கடத்திகளுக்கான பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகிறது

இதனால் உற்பத்தி செலவு அதிகரிப்பதால், கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மெர்சிடிஸ் போல் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் ஏற்படுகிறது. இருப்பினும் மெர்சிடிஸ் பிராண்டில் இருந்து கடந்த 3 மாதங்களில் நீண்ட வீல்பேஸ் இ-க்ளாஸ் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட லக்சரி காராக விளங்குகிறது. அதேபோல் ஏ-க்ளாஸ் லிமௌசைன், எஸ்-க்ளாஸ் லிமௌசைன் மற்றும் ஜி.எல்.ஏ, ஜிஎல்சி, ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் போன்ற மெர்சிடிஸின் எஸ்யூவி கார்களும் சிறப்பாக விற்பனையாகி உள்ளன.

இதில் மெர்சிடிஸ் ஜிஎல்சி ஆனது தற்சமயம் அதிகளவில் விற்பனையாகக்கூடிய லக்சரி எஸ்யூவி காராக முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில் ஏஎம்ஜி மற்றும் சூப்பர் லக்சரி கார்களின் விற்பனையும் நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஏறக்குறைய 35% வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடத்திலும் அவ்வப்போது புதிய அப்டேட் செய்யப்பட்ட கார்களை அறிமுகப்படுத்தி விடுவதாகும்.

நடப்பு 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலும் அறிமுகப்படுத்த சில புதிய கார்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் சொகுசு கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனம் எப்போதுமே மெர்சிடிஸ் பக்கமே உள்ளது. அத்துடன் இந்த ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் இணைப்பு கார் தொழிற்நுட்பங்களை தனது கார்களில் வழங்குகிறது.

அதேபோல் இந்திய நிதி சேவைகள் துறையில் இருந்தும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை எளிமையாக வாங்குவதற்கு ஏற்ப நெகிழ்வான நிதித்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, மெர்சிடிஸ் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய சில்லறை விற்பனை தளமான ROTF (Retail Of The Future) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற துவங்கியுள்ளது. இதுவும் பென்ஸ் கார்களின் விற்பனை முன்னேற்றத்திற்கு காரணம் என சொல்லலாம்.

இந்தியாவில் பெரும்பான்மையான கார்களை சிகேடி முறையில் (அதாவது பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள தொழிற்சாலையில் முழு காராக உருவாக்கப்படுவது) மெர்சிடிஸ் சந்தைப்படுத்தி வருகிறது. இத்தகைய சிகேடி மாடல்களான ஏ-க்ளாஸ் லிமௌசைன், இ-கிளாஸ் உள்ளிட்டவை 2-இல் இருந்து 3 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன. அதிகப்பட்சமாக ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் 8இல் இருந்து 11 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








