பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அசத்தும் எம்ஜி நிறுவனம்... கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்வு!
இந்தியாவில் எம்ஜி நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்திருப்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 காலாண்டர் ஆண்டின் முதல் மாதத்தில், அதாவது கடந்த ஜனவரி மாதத்தில், எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 4,306 கார்களை விற்பனை செய்துள்ளது. 2021ம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அதாவது 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால், இது 20 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவே மாதாந்திர ரீதியில் ஒப்பிட்டால், அதாவது கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், இது 69 சதவீத வளர்ச்சியாகும். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட சுகாதார நெருக்கடி மற்றும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது கடுமையாக திணறி வருகிறது.

இந்த பிரச்னைகளால் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் காரணமாக உதிரிபாகங்கள் சப்ளையில் பாதிப்புகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைகளுக்கு மத்தியிலும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் அஸ்டர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுடன் எம்ஜி அஸ்டர் போட்டியிட்டு வருகிறது. எம்ஜி அஸ்டர் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரில் ஏராளமான அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டிருப்பது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எம்ஜி அஸ்டர் காரின் முதல் பேட்ஜ் ஒரு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். முதல் பேட்ஜில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 5 ஆயிரம் அஸ்டர் கார்களை ஒதுக்கியிருந்தது.

அவை அனைத்துமே ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. அதேபோல் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனையும் ஓரளவிற்கு சிறப்பாக இருந்து வருகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது.

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 44.5 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 419 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதால் சந்தேகமில்லை. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் இது போட்டியிட்டு வருகிறது.

எனினும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அளவிற்கு எம்ஜி இஸட்எஸ் விற்பனையாவது கிடையாது. சற்று விலை உயர்ந்த செக்மெண்ட்டில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் நிலைநிறுத்தப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய மாடல் விரைவில் களமிறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது உள்ள பேட்டரி தொகுப்பை காட்டிலும் சிறிய பேட்டரி தொகுப்பை இந்த புதிய மாடல் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விலையை குறைவாக நிர்ணயம் செய்து, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் போட்டியை ஏற்படுத்துவதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

இவை தவிர ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அனைத்து கார்களுமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக டிமாண்ட் இருப்பதால் அதை பயன்படுத்தி கொள்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் விரும்புகிறது. எனினும் வரும் காலங்களில் மற்ற ரகங்களை சேர்ந்த கார்களையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








