செப்டம்பர் 1ல் இருந்து வாகனங்களில் GPS கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி! புதியவிதி எந்த வாகனங்களுக்கு பொருந்தும்?
ஜிபிஎஸ் கருவியை குறிப்பிட்ட ரக வாகனங்களில் கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எந்தெந்த ரக வாகனங்களுக்கு இந்த புதிய விதி பொருந்தும் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மத்திய அரசு வாகனங்கள் சார்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. பத்து மற்றும் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய வாகனங்களின் பயன்பாட்டிற்கு அது தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதேபோல், வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு உச்சபட்ச அபராத விதிகளை அது நடைமுறைப்படுத்தியது. இதனால், நூறு ரூபாயாக இருந்த அபராத விதி ரூ. 1,000க்கும், ஆயிரம் ரூபாயாக இருந்த போக்குவரத்து விதிமீறல்களுக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரம் வரையிலும் உயர்த்தப்பட்டது. இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை வாகனத்துறை சார்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே தற்போது புதிதாக ஜிபிஎஸ் கருவி கட்டாயம் எனும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருக்கின்றது. குறிப்பிட்ட ரக வாகனங்களுக்கு மட்டுமே இந்த விதி கட்டாயம் என்பது குறிப்பிடத்தகுந்தது. வெவ்வேறு வாயுக்களைக் கையாளக் கூடிய வாகனங்களிலேயே ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பையே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டிருக்கின்றது.

அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கூட்ஸ் வாகனங்களைத் தயாரிக்கும் வாகன உற்பத்தியாளர்கள், அவர்கள் விற்பனைச் செய்யும் ஆபத்தான வாயுக்களைக் கையாளக் கூடிய டேங்கர் மற்றும் டிரக்குகளில் செப்டம்பர் 1 முதல் ஜிபிஎஸ் கருவியைக் கட்டாயமாகப் பொருத்த வேண்டும்" என தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி மிகவும் அபாயகரமானப் பொருட்களைக் கையாளும் வகையில் உருவாக்கக் கூடிய வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அனுமதியின் வரம்பில் இல்லாத வாகனங்கள்கூட ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் ஆபத்தான வாயுக்களை ஏற்றி செல்வது தங்களின் கவனத்திற்கு தெரிய வந்திருப்பதாக கூறியிருக்கும் அமைச்சகம் இந்த செயலை ஒழுங்குபடுத்தும் விதமாகவே ஜிபிஎஸ் கருவியை கட்டாயமாக்கியிருப்பதாக காரணம் தெரிவித்திருக்கின்றது.

அரசின் இந்த அறிவிப்பால் என்2 மற்றும் என்3 பிரிவில் விற்பனைச் செய்யப்படும் கனரக வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கும் என பொருந்துமா என்பது பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இதுவரை, செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாகப் பெருத்தப்பட வேண்டும் என மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

என்2 பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் கனரக வாகனங்கள் 3.5 டன் ரக வாகனமாகும். இந்த வாகனங்கள் 12 டன் வரையிலான பொருட்களை கையாளும் திறன் கொண்டது. இதேபோல், என்3 பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள் 12 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பொருட்களைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த ரக வாகனங்களுக்கே ஜிபிஎஸ் கருவி கட்டயாமாக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறிய, வாகனம் சென்றுக் கொண்டிருக்கும் இடத்தை அறிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். இதன் வாயிலாக ஆபத்தான மற்றும் அபாயகரமான பொருட்களைக் கையாளக் கூடிய வாகனங்களின் நடமாட்டை மிக சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே அரசு ஜிபிஎஸ் கருவியைக் கட்டாயமாக்கியிருக்கின்றது.

ஜிபிஎஸ் கருவி வாயிலாக வாகன திருட்டையும் தவிர்க்க முடியும். நிகழ்நேர இருப்பிடத்தை இந்த கருவியின் வாயிலாக கண்டறிய முடியும் என்பதால், அக்கருவி பொருத்தப்பட்ட வாகனம் நாட்டின் எந்த மூலையில் பயணித்துக் கொண்டிருந்தாலும் நொடிப் பொழுதில் கண்டுபிடித்துவிட முடியும். இதனால்தான், சில காவல்நிலையங்கள் ஜிபிஎஸ் கருவியை வாகனங்களில் பொருத்துமாறு அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, வாகன திருட்டு அதிகம் நடைபெறும் பகுதியில் உள்ளவர்களுக்கு இந்த அறிவுரைகளை காவலர்கள் வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications








