இனி கட்டாயம் செஞ்சே ஆகனும்... கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட மத்திய அரசு...
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் விபத்திற்கு பிறகு மத்திய அரசு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கான தரக்கட்டுப்பாடு விதிகளில் பின் சீட்டில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணிவில்லை என்றாலும் அலாரம் அடிக்க வேண்டும் என்ற புதிய விதியை வகுத்துள்ளது. இதை வாகன தயாரிப்பு விதிகளுக்கான தரக்கட்டுப்பாடு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதனால் இனி கார்கள் தயாிக்கப்படும் போதே பின் சீட்டிற்கான சீட் பெல்ட் அலாரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்த மாத துவக்கத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தில் அவர் காரின் பின் சீட்டில் சீட்பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்தார். அதனால் கார் விபத்தில் சிக்கும் போது அவர் காருக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டு அதனால் உயிரை இழந்தார். பொதுவாக இந்தியாவில் கார்களில் பயணிக்கும் பலருக்கும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தால் சீட் பெல்ட் அணியத் தேவையில்லை என எண்ணம் இருக்கிறது.

ஆனால் மோட்டார் வாகன சட்டப்படி ஒரு காரில் எந்த சீட்டில் அமர்ந்திருந்தாலும் அந்த நபர் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இதுவரை இந்தியாவில் பெரும்பாலும் முன் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றால் போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். ஆனால் பின் சீட்டில் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை.

ஆனால் சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்குப் பிறகு பின் சீட்டில் சீட்பெல்ட் அணிவது குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் பல பகுதிகளில்போலீசார் பின் சீட்டில் சீட்பெல்ட் அணியாதவதர்களுக்கு அபராதம் விதிக்க துவங்கினர். இதற்கிடையில் சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்கு பிறகு மத்திய போக்குவரத்துத் துறையினர் பின் சீட்டில் சீட் பெல்ட் குறித்த புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் தற்போது வாகன தயாரிப்பு அதற்கான தர கட்டுப்பாட்டில் வாகனங்களை ஒருவர் ஸ்டார்ட் செய்து பயணிக்கும் போது முன் சீட்டில் அமர்ந்திருப்பவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அலாரம் அடிக்கும் கருவிகள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சொல்லியிருந்தனர். ஆனால் தற்போது அந்த விதிகள் சற்று மாற்றப்பட்டுள்ளது.

தற்போது மத்திய போக்குவரத்துத் துறை போக்குவரத்து வாகன தரக்கட்டுபாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாகனத்தின் பின்புறம் உள்ள சீட்களில் முன்புறம் பார்த்தவாறு அமைக்கப்படும் சீட்களில் சீட்பெல்ட் அலாரம் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சொல்லியுள்ளனர். இது அனைத்துவிதமான M மற்றும் N கேட்டகிரி வாகனங்களுக்கு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய போக்குவரத்துத் துறை இந்தியாவில் சீட் பெல்ட் அலாரங்களை தடை செய்யும் கருவிகளை விற்பனை செய்ய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மூலம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இனி கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்கள் எந்த சீட்டில் அமர்ந்திருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு முன்னர் இந்தாண்டு துவக்கத்தில் மத்திய போக்குவரத்துத் துறை கார்களில் 8 பயணிகள் வரை பயணம் செய்யும் அனைத்து பயணிகள் கார்களுக்கும் கட்டாயம் 6 ஏர்பேக்கள் இருக்க வேண்டும் எனக் கூறி அதற்கு 2022 அக்டோபர் 1 தேதியை கெடுவாக விதித்துள்ளது.

இதற்கிடையில் ஆன்லைன் கேப் நிறுவனங்களான உபேர், ஓலா போன்ற நிறுவனங்கள் தனது டிரைவர்களுக்கு பின் பக்க சீட்டில் சீட் பெல்ட் வேலை செய்கிறதா என செக் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








