உள்நாட்டு விற்பனையில், மாருதி கார்களுக்கே இந்த நிலைமையா!! 2022-ஆவது நல்ல ஆண்டாக அமையுமா?
MSIL எனப்படும் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் கடந்த 2021 டிசம்பர் மாத ஒட்டுமொத்த (பயணிகள் வாகனங்கள் + கமர்ஷியல் வாகனங்கள்) விற்பனை எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய - ஜப்பானிய கூட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1,53,149 யூனிட் வாகனங்களை இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது. இது 2020 டிசம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 4% குறைவாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 1.60 லட்சத்தை கடந்து, 1,60,226ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்ட மாருதி வாகனங்கள் என்று பார்த்தால், 1,26,031 யூனிட் வாகனங்களை இந்த இந்திய-ஜப்பானிய நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இவற்றுடன், மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த மாதத்தில் 4,838 வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

இவை போக, 1,53,149 யூனிட்களில் மீதி 22,280 யூனிட் மாருதி சுஸுகி வாகனங்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் இந்தியாவில் இருந்து மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்த அதிகப்பட்ச வாகனங்களின் எண்ணிக்கை இதுவாகும். இருப்பினும் உள்நாட்டில் மாருதி பயணிகள் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 13% குறைந்துள்ளது.

2020 டிசம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை எண்ணிக்கை மட்டுமே 1.50 லட்சத்தை கடந்திருந்தது. குறை-கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை கடந்த 2021ஆம் ஆண்டு முழுவதும் பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தலைவலியாக அமைந்தது. அதிலும் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் என அழைக்கப்படும் மாருதி சுஸுகி கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலை தயாரிப்பு பணிகளை வெகுவாக குறைந்துவந்தது.

கடந்த டிசம்பர் மாதத்திலும் வழக்கமான தொழிற்சாலை பணிகளை சிப்கள் தேவையால் 15% வரையில் குறைத்து கொள்வதாக மாருதி சுஸுகி அறிவித்திருந்தது. கடந்த டிசம்பரிலாவது பரவாயில்லை, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 40- 60% வரையில் தயாரிப்பு பணிகளை இந்த நிறுவனம் குறைத்து கொண்டது. இதன் விளைவாக கார்களை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு அதிகரிக்கிறது.

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் தங்களது கார்கள் தயாரிப்பில் எலக்ட்ரானிக் பாகங்களுக்கான தட்டுப்பாடு சற்று பாதிப்பை ஏற்படுத்தியதாக மாருதி சுஸுகி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடைகள் அனைத்தும் உள்நாட்டில் மாருதி கார்களின் விற்பனையையே பாதித்துள்ளன என்பதையும், வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பதையும் தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகியின் கடந்த மாத வாகன விற்பனை நிலவரம் வெளிக்காட்டுகிறது.

மாருதி சுஸுகி கார்கள் ஒவ்வொன்றும் தனியாக எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸா இரண்டையும் சேர்த்து கடந்த மாதத்தில் 16,320 யூனிட்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவை இரண்டின் கூட்டு விற்பனை 3இல் 1 பங்கு குறைந்துள்ளது.

ஏனெனில் அந்த மாதத்தில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 35% அதிகமாக 24,927 ஆல்டோ & எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசைர் இவை நான்கையும் சேர்த்து மொத்தம் 69,345 யூனிட்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையும் 2020 டிசம்பர் மாதத்தின் 77,641 யூனிட்கள் உடன் ஒப்பிடுகையில் 11% குறைவாகும்.

மாருதி சுஸுகி விற்பனை செய்யும் ஒரே ஒரு நடுத்தர-அளவு செடான் காரான சியாஸ் கடந்த மாதத்தில் 1,204 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020 டிசம்பரில் 1,204 சியாஸ் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ் மற்றும் எர்டிகா கார்கள் மூன்றும் மொத்தமாக சேர்த்து கடந்த டிசம்பரில் 26,982 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

மற்ற பிரிவு மாருதி கார்களின் விற்பனை 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்து இருப்பினும், இந்த மூன்று மாடல்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் 5% அதிகரித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இதுவரையில் இல்லாத அளவிற்கு மாருதி சுஸுகி கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ள கார்களின் எண்ணிக்கையான 22,280 உடன் ஒப்பிடுகையில், 2020 டிசம்பரில் ஏற்றுமதி செய்யப்பட்ட மாருதி கார்களின் எண்ணிக்கையான 9,938 பெரிய அளவில் குறைவாகும்.


Click it and Unblock the Notifications