போன தடவ தமிழகம் இந்த முறை நாக்பூரா! ஒரே நாளில் பல்காக டெலிவரி செய்யப்பட்ட டாடா எலெக்ட்ரிக் கார்கள்...
ஒரே நாளில் டாடா எலெக்ட்ரிக் கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அண்மையில் நம்ம சென்னையில் ஒரே நாள் ஒரே நேரத்தில் 101 டாடா எலெக்ட்ரிக் வாகனங்கள் டெலிவரி கொடுக்கப்பட்டன. இந்த சம்பவம் டாடாவின் மின்சார கார் மாடல்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

அதிலும், நிறுவனத்தின் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு மிக மிக அமோகமான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பது மிக தெளிவாக உறுதியாகியது. ஏனெனில், அந்த நாளில் அதிக எண்ணிக்கையில் டாடா நெக்ஸான் இவி மின்சார கார் மாடலே டெலிவரி கொடுக்கப்பட்டன.

ஒட்டுமொத்த எண்ணிக்கையான 101 இல் அதிகபட்சமாக நெக்ஸான் இவி 70 யூனிட்டுகளும், 31 யூனிட்டுகள் டிகோர் இவி-யும் டெலிவரி செய்யப்பட்டன. இந்த நிலையில், தற்போது இதேமாதிரியான அதிக எண்ணிக்கையில் டாடா எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி வழங்கும் சம்பவம் இந்தியாவில் மீண்டும் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இங்கு ஒரே நாளில் 51 யூனிட்டுகள் டாடா எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றன. இதிலும் டாடாவின் நெக்ஸான் இவி மின்சார கார்களே அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. 39 யூனிட்டுகள் நெக்ஸான் இவி-க்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் கூறியிருக்கின்றது.

இதேபோல், 9 யூனிட்டுகள் டிகோர் இவியும், அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் இவி மேக்ஸ் 3 யூனிட்டுகளும் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தரமான சம்பவத்தை ஆதித்யா ஆட்டோ ஏஜென்சி எனும் ஒற்றை டாடா கார் விற்பனையாளராலே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

கார் டெலிவரி கொடுக்கும் நிகழ்வில் இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அவரே புதிதாக டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கிய உரிமையாளர்களுக்கு சாவியையும் வழங்கினார். இந்நிகழ்வில், முன்னாள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி விகாஷ் சிர்புர்கர், கார் விற்பனையாளர் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்க் பல்காக டாடா எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற அதிக எண்ணிக்கையில் டாடா மின்சார கார்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பதனால், நாட்டின் முதன்மையான மின் வாகன உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் மாறியிருக்கின்றது. மேலும், மின்சார நான்கு வாகன சந்தையில் பெரும் பங்கையும் அது கொண்டிருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் அதன் சந்தை பங்கு 87 சதவீதமாக உள்ளது. இன்று வரை டாடாவால் 25 ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா தற்போது தனது மின்சார வாகன பட்டியலில் டிகோர் இவி, நெக்ஸான் இவி மற்றும் புதிய சேர்ப்பான நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது.

இதில், நெக்ஸான் இவி மேக்ஸ் என்பதே ரியல் உலகில் அதிக ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடியதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 17.74 லட்சம் ஆகும். டாடாவின் ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். நெக்ஸான் இவி மேக்ஸ் எக்ஸ்இசட்-ப்ளஸ் (Nexon EV Max XZ+) மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் (Nexon EV Max XZ+ Lux) ஆகியவை அந்த தேர்வுகள் ஆகும்.

இக்காரின் முழு ரேஞ்ஜ் திறன் 437 கிமீ என கூறப்படுகின்றது. அதாவது, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 437 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் மாடலில் 40.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான நெக்ஸான் இவி மாடலைக் காட்டிலும் 33 சதவீதம் அதிக கெபாசிட்டி கொண்ட பேட்டரி ஆகும்.

வழக்கமான நெக்ஸான் இவி முழு சார்ஜில் 312 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும். இதுபோன்று ரெகுலர் நெக்ஸான் இவியைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளுடன் நெக்ஸான் இவி மேக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நெக்ஸான் இவி-க்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வரும்நிலையில், அதனை இரட்டிப்பாக்கும் நோக்கில் இப்புதிய மாடல் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கும் வரும் காலங்களில் நல்ல டிமாண்ட் நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications