கவர்ச்சிகரமான விலை... மாருதியின் புதிய காருக்கு புக்கிங் குவிகிறது! பாதுகாப்பான டாடா காருக்கு கடும் நெருக்கடி!
2022 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 2022 பலேனோ காருக்கு தற்போது வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய மாருதி சுஸுகி பலேனோ காருக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது? என்பதற்கு இந்த முன்பதிவு எண்ணிக்கை ஒரு சாட்சி ஆகும். 2022 மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 6.35 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

அதே சமயம் 2022 மாருதி சுஸுகி பலேனோ காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் 2022 பலேனோ காருக்கு சந்தா திட்டத்தையும் வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு 13,999 ரூபாய் என்ற கட்டணத்தில், மாத சந்தா திட்டம் தொடங்குகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ திகழ்கிறது. அத்துடன் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. இந்த சூழலில் புதிய மாடலின் வருகையால், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது. இதன் புதிய மாடலின் வருகையால், போட்டி கார்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பழைய மாடலை போன்று, புதிய பலேனோ காரும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவே விற்பனை செய்யப்படும்.

மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற பிரீமியம் மாடல்களை விற்பனை செய்வதற்காக நெக்ஸா ஷோரூம்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாருதி சுஸுகி பலேனோ காரின் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி புதிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகியவற்றை புதிய மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது. முன் பக்க பம்பரும் கூட சிறியளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஸ்போக் அலாய் வீல்கள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பின் பக்க பம்பர் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் உடன் புதிய 9 இன்ச் டிஜிட்டல் ஹெச்டி டச்ஸ்க்ரீன் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளையும் புதிய மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது. புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில், 1.2 லிட்டர், ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 ஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் (AGS) கியர் பாக்ஸ் தேர்வுடனும் இந்த இன்ஜின் கிடைக்கிறது. மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக தனது வேகன் ஆர் காரின் புதிய மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அனேகமாக 2022 மாருதி சுஸுகி வேகன் ஆர், இந்திய சந்தையில் அடுத்த மாதம், அதாவது வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2022 பலேனோ காரை போன்றே, 2022 மாருதி சுஸுகி வேகன் ஆர் காரிலும் பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மாருதி சுஸுகி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது மிக நீண்ட காலமாக வெளியாகி வரும் தகவல்கள் ஆகும். ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications







