முதல் ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் கார்... 25% சோதனைகள் முடிந்தன!! -40 டிகிரியிலும் இயங்கும் அசாதாரண பண்பு...
ரோல்ஸ் ராய்ஸின் முதல் எலக்ட்ரிக் கார் அதன் பனிக்கால சோதனை ஓட்டங்களை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்தும், முதல் எலக்ட்ரிக் ரோல்ஸ் ராய்ஸ் குறித்து இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

பிரபல பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் அதன் முதல் எலக்ட்ரிக் காரை ஸ்பெக்டர் இவி என்கிற பெயரில் உருவாக்கி வருகிறது. இந்த உருவாக்கத்தின் ஒரு பகுதியாக ஸ்பெக்டர் இவி-யின் பனிக்கால சோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிக் வளைவிற்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைகளில் சுமார் -26 டிகிரிக்கும் -40 டிகிரிக்கும் இடைப்பட்ட மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் இவி சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த அசாதாரண சூழல்களில் மிகவும் அடிப்படை சோதனைகளை மட்டுமே பொறியியலாளர்கள் ஸ்பெக்டர் இவி-யின் மீது மேற்கொண்டு பார்த்ததாக ரோல்ஸ்-ராய்ஸ் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, அத்தகைய சூழலில் காரின் அனைத்து அமைப்புகளும் அடிப்படை நிலையிலாவது செயல்படுகின்றனவா என தனித்தனியாக கணக்கிட்டு பார்க்கப்பட்டதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவிக்கிறது. குறிப்பாக பழமையான, பாரம்பரியமிக்க ரோல்ஸ் ராய்ஸ் முத்திரையை ஏற்கும் அளவிற்கு இந்த எலக்ட்ரிக் காரின் மோட்டார் உள்ளதா என்பது தீவிரமாக ஆராய்ந்து பார்க்கப்பட்டதாம்.

இந்த ஆய்வுகளில் என்விஎச் சோதனைகள், வெப்பமாக்கல், காற்றோட்டமாக்கல், ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் ஆகியவை அடங்குகின்றன. தற்போதுவரையில் மட்டுமே சுமார் 5 லட்ச கிமீ-க்கும் அதிகமான தூரத்திற்கு ஸ்பெக்டர் இவி சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாக ரோல்ஸ்-ராய்ஸ் தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில், இது மொத்த சோதனையோட்ட தூர இலக்கில் வெறும் 25% மட்டுமே ஆகும்.

யுகே போன்ற சர்வதேச சந்தைகளில் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் இவி அடுத்த 2023இல் வெளியீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் அந்த நாடுகளில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம். இவை எல்லாம் முடிந்த பின்னரே இந்தியாவில் ஸ்பெக்டர் இவி-ஐ அறிமுகம் செய்வதை பற்றி ரோல்ஸ்-ராய்ஸ் யோசிக்கும்.

ஆதலால் ரோல்ஸ்-ராய்ஸின் முதல் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகலாம். பனிக்கால சோதனைகள் முடிவு பெற்றிருப்பது குறித்து ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் டார்ஸ்டன் முல்லர்-ஓட்வோஸ் கருத்து தெரிவிக்கையில், "ஒவ்வொரு புதிய ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் காரின் அறிவிப்பும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

ஆனால் ஸ்பெக்டர் சந்தேகத்திற்கு இடமின்றி ரோல்ஸ்-ராய்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தயாரிப்பு ஆகும். ஏனெனில் இது ஒரு தயாரிப்பை காட்டிலும் அதிகமாகும். இது எங்கள் பிரகாசமான, தைரியமான எலக்ட்ரிக் எதிர்காலத்தின் சின்னமாகும். மேலும் இது எங்கள் ஆற்றல்-வழங்கி தொழிற்நுட்பத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை குறிக்கிறது.

இந்த காரணத்திற்காகவே, ஸ்பெக்டரை போலவே குறிப்பிடத்தக்க மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு சோதனை திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ரோல்ஸ்-ராய்ஸை போல் சிந்திக்கவும், நடந்து கொள்ளவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பெக்டரின் அசாதாரண செயல்படுதிறன் 2.5 மில்லியன் கி.மீ-களை கடக்கும். ஆகையால், இது ரோல்ஸ் ராய்ஸின் 400 ஆண்டுகளுக்கும் மேலான பயன்பாட்டிற்கான உருவகப்படுத்துதலாகும்.

இந்த பயணத்தின் 25 சதவிகிதம் முடிந்துவிட்டது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். மேலும், முடிவுகள் எங்களின் லட்சிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளன" என்றார். இந்த பனிக்கால சோதனைகளின் ஒரு பகுதியாக, 'குறைக்கப்பட்ட நேரம்' என்ற நடவடிக்கைகளையும் ரோல்ஸ்-ராய்ஸ் மேற்கொண்டு பார்த்தது. இந்த சமயங்களில் ரோல்ஸ்-ராய்ஸின் பொறியியலாளர்கள் மிகவும் உன்னிப்பாக செயல்பட்டனர்.

ஏனெனில் அந்த சமயங்களில்தான், ஸ்பெக்டர் இவி-யின் சேசிஸ் கண்ட்ரோல் அமைப்புகள், ஆற்றல்-வழங்கி மேலாண்மை அமைப்புகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை அளவீடு செய்வதில் முனைப்புடன் இருந்தனர். இதற்காக பனி மற்றும் பனிக்கட்டியில் குறைந்த வேகத்திலும், அதிவேகத்திலும் காரை இயக்கி பார்த்தனர். இத்தகைய தீவிரமான சோதனைகளுக்கு முக்கிய காரணம், இருப்பதிலேயே மிகவும் இணைப்பு வசதிகளை கொண்ட ரோல்ஸ்-ராய்ஸ் காராக ஸ்பெக்டர் இவி கொண்டுவரப்படுகிறது.


Click it and Unblock the Notifications








