இனி தரம் குறைவான டயர்களை எல்லாம் தயாரிக்க முடியாது!! அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு!
டயர்கள் உற்பத்தியில் புதிய தர நிலைப்பாட்டை கொண்டுவரும் திட்டத்தில் மத்திய அரசாங்கம் இறங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் சாலை போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்திலும் வாகன தயாரிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த வகையில் 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்ட புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் இந்திய பயணிகள் கார்கள் துறையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தியில் புதிய தர நிலைப்பாட்டை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ளது. டயர்கள் எந்தவொரு வாகனத்திலும் மிக முக்கியமான பாகமாகும். ஒரு வாகனத்தை எந்த அளவிற்கு பார்த்து பார்த்து வடிவமைத்தாலும், அதன் டயர்கள் தரமானவைகளாக இல்லையெனில் அது மொத்த வாகன செயல்படுதிறனையும் பாதிக்கும்.

இது மலிவான காரில் இருந்து சூப்பர் கார், அளவில் பெரிய லாரிகள் வரையில் பொருந்தக்கூடியது. ஏனெனில் ஒரு வாகனத்தை இயங்கும் சாலையுடன் தொடர்புப்படுத்துவது டயர்கள் மட்டுமே. இருப்பினும், இந்திய டயர்கள் சந்தையில் ஒரு ஒழுங்குமுறை இல்லாததால் மலிவான டயர்களும் விற்பனையில் தற்சமயம் உள்ளன. வாடிக்கையாளர்களும் விலை குறைவாக கிடைக்கிறதென எதோ ஒரு பிராண்டில் டயர்களை வாங்கி பொருத்தி கொள்கின்றனர்.

இந்த குறைப்பாட்டை அடையாளம் கண்டுள்ள மத்திய அரசாங்கம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டயர்களின் தரத்தில் 3 புதிய தரநிலைகளை கொண்டுவருகிறது. இதுகுறித்து மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி1 (பயணிகள் கார்கள்), சி2 (எடை குறைவான லாரிகள்) மற்றும் சி3 (கனரக லாரிகள் & பேருந்துகள்) டயர்களின் சுழல் தடைகள் (நிலை-2), சுழல் சத்தம் (நிலை-2) மற்றும் ஈரமான பரப்பில் பிடிமானம் உள்ளிட்டவற்றில் புதிய தரநிலைகள் அமலுக்கு கொண்டுவரப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய தர நிலைகள் அனைத்தும் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் ஸ்டாண்டர்ட் (AIS) 142:2019 என வரையறைக்கப்பட்டுள்ளன. இந்த வரையறையின்படியே, சி1, சி2 & சி3 வாகனங்களின் டயர்கள் வருகிற 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே தற்போதைய டிசைனில் தயாரிக்கப்பட்ட டயர்களை அடுத்த 2023 ஏப்ரல் மாதம் வரையில் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யலாம்.

இந்த காலக்கெடு ஆனது சுழல் தடைகள் மற்றும் ஈரமான பரப்பில் பிடிமானத்தை தற்போதைய தரநிலையில் கொண்டிருக்கும் டயர்களுக்கே ஆகும். தற்போதைய தரநிலையில் சுழல் சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய டயர்களுக்கு கூடுதலாக 2 மாதங்கள் என 2023 ஜூன் மாதம் வரையில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சி1, சி2 & சி3 டயர்கள் யாவும் மத்திய அரசாங்கத்தின் புதிய தரநிலையில் வடிவமைக்கப்பட்டவைகளாக இருக்கும்.

இதில் ஈரமான பரப்பில் பிடிமானத்திற்கான தரநிலைகளை மேம்படுத்துவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நம் நாட்டில் வருடந்தோறும் அதிகளவில் மழையை பெறும் மாநிலங்கள் ஏராளமானவை உள்ளன. மழை பெய்யாவிடினும், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது என பெரும்பாலான சாலைகளில் அவ்வப்போது ஈரமான பகுதிகளை காண முடிகிறது (குறிப்பாக நகர்புற சாலைகளில்).

அத்தகைய சாலைகளில் தினந்தோறும் இயங்கும் வாகனங்களின் டயர்களின் பிடிமானம் எந்த அளவிற்கு உள்ளது என்பது கேள்விக்குறியே. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் மக்கள் தங்களது வாகனங்களில் ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப ஒரு வருடத்தில் பலமுறை டயர்களை மாற்றி பயன்படுத்துகின்றனர். அத்தகைய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட காலநிலைக்கான டயர்களை தயாரிக்கவே பல பிராண்ட்கள் உள்ளன.

ஆனால் நம் இந்தியாவிலோ எல்லா காலநிலைக்கும் ஒரே விதமான டயர்கள்தான். பழுதாகினால்தான் புதிய டயரை மாற்றுவது என்ற மனநிலையே நம்மில் பெரும்பாலானோர்க்கு உள்ளது. இதற்கு நம் நாட்டு மக்களின் பொருளாதார நிலை மற்றும் வெளிநாடுகளை போன்று அவ்வப்போது மாறாத காலநிலையை காரணங்களாக கூறினாலும், பயணிகளின் பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை என்பதே கசப்பான உண்மை.

இதனாலேயே நேரடியாக தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி முறையை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் மூலமாக ஐரோப்பாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்தின் ஒழுங்குமுறைகளுக்கு இணையாக வந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. இணையாக வருகிறதோ இல்லையோ... மலிவான விலையில் தரம் குறைவான டயர்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தானாக இந்தியாவை விட்டு நடையை கட்டும்.


Click it and Unblock the Notifications








