2022 டொயோட்டா க்ளான்ஸாவிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! முன்தொகை ரூ.11,000 மட்டுமே!
புதிய அப்டேட் செய்யப்பட்ட க்ளான்ஸா ஹேட்ச்பேக் காருக்கான முன்பதிவுகளை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானை தலைமையிடமாக கொண்ட டொயோட்டாவின் உள்நாட்டு இணைப்பு கார் தொழிற்நுட்பத்துடன், ஆற்றலிமிக்க & எரிபொரிள்-செயல்திறன்மிக்க புதிய க்ளான்ஸா ஹேட்ச்பேக் காரினை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த கார் வழங்கும் மைலேஜ் 22கிமீ-க்கும் அதிகமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது டொயோட்டாவும் க்ளான்ஸாவின் முன்பதிவுகளை துவங்கியுள்ளது. www.toyotabharat.com என்கிற இணையத்தள பக்கத்திலோ அல்லது அருகில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப் மையத்திலோ முன்தொகையாக ரூ.11,000-ஐ செலுத்தி 2022 க்ளான்ஸா ஹேட்ச்பேக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்யும் முறைகள் பெரியதாக கடினமானதாக இருக்காது, 2,3 க்ளிக்குகள் தான். பலேனோவின் டொயோட்டா ரீபேட்ஜ்டு வெர்சன் தான் க்ளான்ஸா என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டொயோட்டாவின் டச் ஆங்காங்கே க்ளான்ஸாவில் உள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று க்ளான்ஸா ஆகும். டொயோட்டா க்ளான்ஸாவிற்கும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்தான் வழங்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்றால் குறிப்பாக காரின் முன் மற்றும் பின்பக்கங்கள் அப்டேட் செய்யப்படும். இந்த வகையில் ஸ்டைலிஷான க்ரில் மற்றும் பம்பர் உடன் முன்பக்கத்தினை 2022 க்ளான்ஸா பெற்றுள்ளது. அதேபோல் பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள் புதிய க்ளான்ஸாவில் வழங்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப வசதிகளாக ஹே டொயோட்டா வாய்ஸ் உதவி, ஹெட்-அப் திரை & 360-கோண கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை வழக்கம்போல் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ என ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடியதாக எதிர்பார்க்கலாம். மேனுவல் & ஆட்டோமேட்டிக் என இரு விதமான தேர்வுகளிலும் இந்த கார் கிடைக்கும். அத்துடன் இதில் வழங்கப்பட்டிருப்பது செயல்திறன் வாய்ந்த கே-சீரிஸ் என்ஜின் ஆகும். இது அதிகப்பட்சமாக 66 கிலோவாட்ஸ் (89 பிஎஸ்) இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இவை எல்லாவற்றையும் விட முக்கிய சிறப்பம்சமாக, அசத்தலான உரிமையாளர் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு மேலும் வழங்கும் விதமாக ஏகப்பட்ட இணைப்பு கார் தொழிற்நுட்பங்கள் 2022 க்ளான்ஸாவில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தயாரிப்பு நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தும். அதிலிலும் குறிப்பாக தவிர்க்க முடியாத காரணத்தினால் 2022 க்ளான்ஸா காரை தேர்ந்தெடுக்கும் டொயோட்டா காரை முதல்முறையாக வாங்குவோர்கள் இதன் செயல்திறனையும், சவுகரியத்தையும் கண்டு முற்றிலுமாக ஆச்சிரியப்பட்டு நிற்பார்கள் என நம்பிக்கையாக டொயோட்டா கூறுகிறது.

புதிய க்ளான்ஸா காருக்கு 3 வருடங்கள்/ 1 லட்ச கிமீ-கள் உத்தரவாதத்தை டொயோட்டா வழங்கியுள்ளது. இதனை கூடுதல் தொகை செலுத்தி 5 வருடங்கள்/ 220,000 கிமீ-களாகவும் அதிகரித்து கொள்ளலாம். இஎம்60 மூலமாக ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் வழங்கப்படும் சேவை ஆனது மிக விரைவாக 60 நிமிடங்களிலேயே முடிந்துவிடுமாம். அத்துடன் சாலையோர உதவிகளையும் க்ளான்ஸாவை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

2022 க்ளான்ஸாவிற்கு முன்பதிவுகள் துவங்கப்பட்டிருப்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவருமான அடுல் சூட் கருத்து தெரிவிக்கையில், "மேம்பட்ட மற்றும் அதேநேரம் மலிவான விலையில் காரை எதிர்பார்ப்போர்க்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புதிய க்ளான்ஸாவை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக டொயோட்டா க்ளான்ஸா மீது நம்பிக்கையை வைத்துள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி கூறுகிறோம். 2019ஆம் ஆண்டில் டொயோட்டா க்ளான்ஸாவை அறிமுகப்படுத்தியது, டொயோட்டாவின் இந்திய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது. ஏனெனில் இந்த தயாரிப்பு பல முதல்முறையாக டொயோட்டா கார் வாங்குபவர்களையும், ஏற்கனவே உள்ள டொயோட்டா வாடிக்கையாளர்களையும் குறிப்பாக டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் இருந்து ஈர்த்துள்ளது.

இன்றுவரை, டொயோட்டா க்ளான்ஸா 66,000 யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது டொயோட்டா இந்திய கார் வாங்குபவர்களுக்கு மிகவும் மலிவு மற்றும் அணுகக்கூடிய முன்மொழிவாக மாறியுள்ளது என்பதற்கு ஒரு சான்றாகும். வசீகரிக்கும் புதிய க்ளான்ஸா மூலம் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தி, சிறந்த விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை திருப்தியை உறுதி செய்வதன் மூலம் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தையும், சிறந்த மலிவு விலையையும் வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்." என்றார்.


Click it and Unblock the Notifications








