விரைவில் வாகனங்களுக்கான வட்டி குறைய போகுது... எந்தெந்த வாகனங்களுக்குனு தெரியுமா?..
விரைவில் வாகனங்களுக்கான வட்டி குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. அனைத்து வாகனங்களுக்குமான வட்டி அல்ல, குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு வட்டியை குறைக்குமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வங்கிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிக தீவிரமாக உள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அரசு சமீப சில காலமாக மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் விஷயத்தில் மிக தீவிரமாக உள்ளது. இதன் அடிப்படையில் அண்மையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சங்களிலும் பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதே அது ஆகும்.

இதுமட்டுமின்றி மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகனங்களினால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கும் விதமாகவே எலெக்ட்ரிக் வாகனங்களை ஆதரிக்கும் செயலை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதுமட்டுமில்லைங்க, சிஎன்ஜி, எல்பிஜி போன்ற வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகின்றது. இந்த நிலையிலேயே பசுமை வாகன பயன்பாட்டை ஊக்குவிதமாக மற்றுமொரு சூப்பரான நடவடிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எடுக்கத் தொடங்கியிருக்கின்றார்.
ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனம், மின்சார வாகனம் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் வாகனங்களை வாங்க விரும்புவோர்களுக்கு வங்கிகள் குறைவான வட்டியில் கடன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றார். ஏற்கனவே, அரசு சார்பில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மானியம் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசுகள் சிலவும் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குகின்றது.
சில மாநில அரசுகள் வரி மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்திருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வங்கிகளை பசுமை இயக்கம் கொண்ட வாகனங்களுக்கு குறைவான வட்டி கடன் திட்டத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றார். மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்ள கல்யாண் கூட்டுறவு வங்கியின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். அப்போது இந்த மாதிரியான ஓர் கோரிக்கையை அவர் வங்கிகளுக்கு முன் வைத்தார். இதன் விளைவாக விரைவில் வங்கிகள் மின்சார வாகனங்களுக்கு தனி கடன் திட்டத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சார வாகனங்களுக்கு மட்டுமின்றி பிற பசுமை வாகனங்களான ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்களுக்கும் தனி கடன் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது, குறைவான வட்டி திட்டத்துடன் கூடிய கடன் திட்டத்தை வங்கிகள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல சிபில் ஸ்கோர் கொண்டவர்களுக்கு உடனடியாக வங்கிகள் கடன் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 24 மணி நேரத்திற்குள் கடன் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், அமைச்சர் நிதின் கட்கரி இன்னும் ஐந்தாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் இயக்கம் படிப்படியாக நிறுத்தப்படுவதே தன்னுடைய கனவு என்றும் அவர் தெரிவித்தார்.
ஆகையால், அரசு வெகு விரைவில் பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டிற்கு ஆப்பு வைக்கும் புதிய விதிகளை நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நாட்டில் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையிலான பழைய வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அமைச்சர் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதே தன்னுடைய கனவு என தெரிவித்து இருக்கின்றார்.
இதுமட்டுமின்றி, விரைவில் அரசு பிஎஸ் 6 2 கட்டம் விதிமுறைகள் நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய விதி தற்போது அமலில் இருப்பதைக் காட்டிலும் மிகக் கடுமையான மாசு உமிழ்வு விதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மிகக் குறைவான மாசை வெளியேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், மாசை அளவிடும் கருவி அனைத்து வாகனங்களும் இடம் பெற வேண்டும் என்பதை இந்த கட்டாயப்படுத்துகின்றது. எனவே எதிர்காலம் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








