மின்சார வாகனங்களின் விலை எப்போது குறையும்? இவ்ளோ சீக்கிரமே குறைய போகுதா! அப்போ தாராளமா காத்திருக்கலாம்!
மின்சார வாகனங்களின் விலை எப்போது குறையும் என்பதற்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின்சார வாகனங்கள் அதிக பயன்பாட்டு வசதிகளைக் கொண்டிருக்கின்றன. ஆகையால், பலரின் விருப்பமான வாகனமாக அவை மாறியிருக்கின்றன. இருப்பினும் அதனை வாங்க முடியாத நிலையே தற்போது நாட்டில் நிலவுகின்றது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஓரளவிற்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

ஆனால், மின்சார கார்களோ ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. எனவே பலரின் எட்டாக் கனியாக மின்சார கார்கள் இருக்கின்றன. இதனால்தான் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் வாகனமாக எலெக்ட்ரிக் கார்கள் காட்சியளிக்கின்றன. இருசக்கர மின்சார வாகனங்கள் சிலவும் இதே நிலையிலேயே உள்ளன. ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார டூ-வீலர்கள் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

இதனால்தான் மத்திய, மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் எத்தனை முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன போதிலும் அவற்றின் விற்பனை மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே தென்படுகின்றது. அதேநேரத்தில் கடந்த காலங்களைக் காட்டிலும் 2021ம் ஆண்டில் மின் வாகன விற்பனை பல மடங்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.

ஆனால் அது போதுமானதாக இல்லை. மேலும், பெரும்பாலானோர் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் எப்போது குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது. இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மத்திய அமைச்சர் ஒருவரின் பேட்டியின் வாயிலாக இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவித்தார். தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல் மிக குறைவான அவை விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்திய வர்த்தக சபை மற்றும் நிதியாண்டு 21 ஏஜிஎம் கூட்டத்திலும் இதே தகவலை அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே, அரசு மின் வாகனங்களின் குறைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "600 மின் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகளை நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை 2023ம் ஆண்டிற்குள் எட்ட திட்டமிட்டிருப்பதாகவும்" அவர் கூறினார்.

இதுமட்டுமின்றி, சோலார் மற்றும் விண்ட் எந்திரங்களால் இயங்கக் கூடிய சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், "இந்தியாவில் மின்வாகனங்கள் மிக குறைவாகவே உள்ளன. ஆகையால், அதன் விலையும் அதிகமாக இருப்பதாக" தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்தியா மின்வாகன புரட்சியை எதிர்பார்ப்பதாக கூறிய அவர், "நாட்டில் 250 ஆரம்பநிலை மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறைவான மின் வாகனங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருப்பதாகவும், பெரிய வாகன உற்பத்தியாளர்கள் மின் வாகன உற்பத்திக்கான செலவை குறைக்கும் முயற்சியில் களமிறங்கியிருப்பதாகவும்" கூறினார். ஆகையால், எதிர்காலத்தில் நிச்சயம் குறைவான விலையில் மின் வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வருகின்றது.


Click it and Unblock the Notifications








