டாடாவுக்கு செம டஃப் குடுக்கறாங்க... ரூ.151 கோடி மதிப்புடைய ஆர்டரை வென்ற பிரபல நிறுவனம்... எதுன்னு தெரியுமா?
எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டரை பிரபல நிறுவனம் ஒன்று வென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எலெக்ட்ரிக் டூவீலர்கள், எலெக்ட்ரிக் கார்கள் என அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு காணப்படுகிறது. இதற்கு எலெக்ட்ரிக் பஸ்களும் விதிவிலக்கு அல்ல.

தற்போது பல்வேறு மாநிலங்களின் அரசு போக்குவரத்து கழகங்களும், பெருநகர போக்குவரத்து கழகங்களும் வழக்கமான டீசல் இன்ஜின் மூலம் இயங்கும் பஸ்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதுதான் இதற்கான முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

டீசல் பஸ்களை விட குறைவான செலவில் இயக்க முடியும் என்பதும் எலெக்ட்ரிக் பஸ்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பிற்கு மற்றொரு முக்கியமான காரணம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் மற்றும் ஒலெக்ட்ரா (Olectra) ஆகிய 2 நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பஸ் உற்பத்தியில் மிகவும் முக்கியமான நிறுவனங்களாக உள்ளன.

இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தற்போது ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. மேற்கு வங்க போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் ஆகியவற்றிடம் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சமீபத்தில் ஆயிரக்கணக்கான எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஒலெக்ட்ரா நிறுவனமும் மிகப்பெரிய ஆர்டர்களை வென்று வருகிறது. அஸ்ஸாம் மாநில போக்குவரத்து கழகத்திடம் (Assam State Transport Corporation) இருந்து ஒலெக்ட்ரா நிறுவனத்திற்கு தற்போது கிடைத்திருக்கும் எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டர் இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

100 எலெக்ட்ரிக் பஸ்களை (100 Electric Buses) சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டரை அஸ்ஸாம் மாநில போக்குவரத்து கழகத்திடம் இருந்து ஒலெக்ட்ரா நிறுவனம் தற்போது வென்றுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் இருந்து கிடைத்துள்ள முதல் ஆர்டர் இது என ஒலெக்ட்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 100 எலெக்ட்ரிக் பஸ்களும் 9 மாதங்களுக்குள் டெலிவரி செய்யப்பட்டு விடும் எனவும் ஒலெக்ட்ரா நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 5 ஆண்டு காலத்திற்கு இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களை பராமரிக்கும் பொறுப்பும் தங்களுக்கு உள்ளதாக ஒலெக்ட்ரா நிறுவனத்தின் பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 100 எலெக்ட்ரிக் பஸ்கள் சப்ளையின் மதிப்பு தோரயமாக 151 கோடி ரூபாய் ஆகும். இதுகுறித்து ஒலெக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கே.வி. பிரதீப் கூறுகையில், ''வட கிழக்கு மாநிலங்களில் இருந்து முதல் ஆர்டரை பெற்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆர்டரின் மூலம் எங்களின் எலெக்ட்ரிக் பஸ்கள் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் இயங்கும்.

எங்களின் எலெக்ட்ரிக் பஸ்கள் குறிப்பிடத்தக்க அளவில் கார்பன் உமிழ்வை குறைத்து வருகின்றன'' என்றார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி கார்பன் உமிழ்வை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதும் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

அஸ்ஸாம் மட்டுமல்லாது, டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களும் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே வரும் காலங்களில் இந்திய சாலைகளில் நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை நம்மால் காண முடியும் என்பது உறுதி.

முன்பெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை பார்ப்பது என்பதே அதிசயமான ஒரு நிகழ்வாகதான் இருந்தது. ஆனால் தற்போது நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை நம்மால் இந்திய சாலைகளில் முடிகிறது. இந்த வரிசையில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பஸ்களும் இணைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.


Click it and Unblock the Notifications








