வெளியானது ரீகால் அறிவிப்பு... மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான வாகனத்தில் பிரச்னை... என்னனு தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான வாகனத்தில் பிரச்னை இருப்பதால் ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் சூப்பர் கேரி (Maruti Suzuki Super Carry) மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இது எல்சிவி (LCV) ரகத்தை சேர்ந்த வாகனம் ஆகும். அதாவது இலகு ரக வர்த்தக வாகனம் (Light Commercial Vehicle).

இந்த சூழலில், சூப்பர் கேரி வாகனத்திற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ரீகால் (Recall) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக வாகனங்களில் ஏதாவது பிரச்னை இருக்கிறது என சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது உறுதி செய்யப்பட்டாலோ உற்பத்தி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ரீகால் அறிவிப்பை வெளியிடும்.

இதன்பின் பிரச்னை சரி செய்யப்பட்டு அந்த வாகனம் மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்படும். இந்த வகையில் சூப்பர் கேரி வாகனத்தில் தற்போது ஒரு பிரச்னை இருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் சந்தேகிக்கிறது. எனவே அந்த பிரச்னையை சரி செய்வதற்காகதான் சூப்பர் கேரி வாகனத்திற்கு தற்போது ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மே 4ம் தேதியில் இருந்து ஜூலை 30ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட 5,002 சூப்பர் கேரி வாகனங்களில் பிரச்னை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 5,002 சூப்பர் கேரி வாகனங்களின் கோ-டிரைவர் சீட் பெல்ட் பக்கிள்களில் பிரச்னை இருக்கலாம் என மாருதி சுஸுகி நிறுவனம் சந்தேகிக்கிறது.

இதை பரிசோதனை செய்து சரி செய்வதற்காகதான் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை மற்றும் பழுதை நீக்குவதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இலவசமாகவே பிரச்னை சரி செய்து தரப்படும். இந்த பாதிப்பு இருக்கும் வாகனங்களின் உரிமையாளர்களை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்கள் தற்போது தொடர்பு கொண்டு வருகின்றன.

மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரையில் இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிஸியாக இயங்கி கொண்டுள்ளது. நடப்பு 2022ம் ஆண்டில் ஏராளமான புதிய மாடல்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இதில், 2022 மாருதி சுஸுகி பலேனோ (2022 Maruti Suzuki Baleno) மற்றும் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (2022 Maruti Suzuki Brezza) போன்ற புதிய மாடல்கள் குறிப்பிடத்தக்கவை. செமி கண்டக்டர் சிப் (Semiconductor Chips) பற்றாக்குறை பிரச்னை நிலவி வரும் நிலையிலும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.

செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையால் கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய முடியாமல் உற்பத்தி நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. அதாவது கார்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த பிரச்னையால் மாருதி சுஸுகி நிறுவனம் மட்டும் பாதிக்கப்படவில்லை. கூடவே இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. சமீப காலமாக இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தி குறைந்திருப்பதற்கு இந்த செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னைதான் முதன்மையான காரணமாக உள்ளது.

இருந்தபோதிலும் சந்தை போட்டியை சமாளிக்கும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களை அப்டேட் செய்ய தவறுவதில்லை. அத்துடன் வரும் மாதங்களில் இன்னும் பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் மாருதி சுஸுகி நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இதில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மிகவும் முக்கியமானது.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications







