என்னங்க இது தொடர் கதையா போச்சு.. சர்வீஸுக்கு போன காரை சில்லு சில்லா நொறுக்கிய சர்வீஸ் மையம்!
சர்வீஸுக்கு வந்த காரை சில்லு சில்லா நொறுக்கிய சம்பவம் நாட்டில் மீண்டும் அரங்கேறி உள்லது. இந்த முறையும் ஷோரூம் ஊழியர்களின் கவனக் குறைவாலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் டாப் செல்லிங் எலெக்ட்ரிக் கார் எது என்றால் அது டாடா நெக்ஸான் இவிதான். இந்த காரை ஆசை ஆசையாக வாங்கிய ஓர் நபரே தற்போது சோகத்தில் மூழ்கி உள்ளார். அண்மையில் சர்வீசுக்கு விடப்பட்ட நிலையில் இந்த கார் விபத்தில் சிக்கியிருக்கின்றது. சர்வீஸ் மைய ஊழியர்களின் கவனக் குறைவினாலேயே தன்னுடைய மின்சார கார் விபத்தில் சிக்கியிருப்பதாக காரின் உரிமையாளர் ராஜீவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Source: Twitter
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ராஜீவ். இவர் ஓர் மருத்துவர் ஆவார். அண்மையிலேயே டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை அவர் வாங்கியிருக்கின்றார். பெரியளவில் மின்சார கார்களுக்கு சர்வீஸ் தேவையில்லை என்றாலும், அவற்றைக் கவனிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் ராஜீவ் தனது நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை சர்வீஸ் மையத்தில் கவனிப்பிற்காக விட்டிருக்கின்றார். இவ்வாறு அவர் சர்வீஸ் மையத்தில் காரை விடுவது 3 ஆவது முறையாகும்.
ஹைதராபாத்தில் உள்ள ஆரஞ்சு ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டிற்கு சொந்தமான சர்வீஸ் மையத்திலேயே அவர் காரை பராமரிப்பிற்காக விட்டிருக்கின்றார். இது டாடா மோட்டார்ஸின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம் ஆகும். இங்குதான் டாடா நெக்ஸான் கவனக்குறைவால் விபத்தில் சிக்கியிருக்கின்றது. சர்வீஸ் மையங்களில் கார் பழுது பார்க்க பயன்படுத்தப்படும் லிஃப்டில் ஏற்றியபோதே இந்த விபத்து நடைபெற்றிருக்கின்றது. சற்று அதிக உயரத்தில் இருந்து கார் விழுந்ததால், அதன் முன் மற்றும் பக்கவாட்டு பகுதி மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது.
இந்த நிகழ்விற்கு சர்வீஸ் மையம் பொறுப்பேற்கவில்லை என தெரிகின்றது. மேலும், விபத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு இன்சூரன்ஸில் கிளைம் செய்து கொள்ளும்படி அவர்கள் ராஜீவை வற்புறுத்தியிருக்கின்றனர். ஆனால், இதற்கு ராஜீவ் ஒத்துப்போகவில்லை. இந்த விபத்தில் தன் மீது எந்த தவறும் இல்லாத பட்சத்தில் எதற்கு இன்சூரன்ஸை கிளைம் செய்ய வேண்டும் என கூறி அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும், இந்த விபத்திற்கு சர்வீஸ் மையமே பொறுப்பேற்று காரை சரி செய்து தரும்படியும் அவர் கூறியிருக்கின்றார்.
ஆனால், இதனை சர்வீஸ் மையம் ஏற்கவில்லை. இதன் விளைவாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அந்த கார் சர்வீஸ் மையத்திலேயே நின்றுக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளர் ராஜீவ் வேதனை தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இந்த விஷயத்தில் ஷோரூமின் எம்டி மற்றும் சிஇஓ தன்னை மிரட்டியதாகவும் சமூக வலைதளத்தில் ராஜீவ் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே டாடா மோட்டார்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் தெரிவித்தும் இந்த விஷயத்தில் பலன் கிடைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தான் அளித்த புகாருக்கு எந்த பதிலும் அளிக்காமல் அந்த புகாரை டாடா வாடிக்கையாளர் சேவை மையம் முடித்துவிட்டதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருக்கின்றார். இதைத்தொடர்ந்து, சர்வீஸ் மைய நிர்வாகத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக நெக்ஸானின் உரிமையாளர் தற்போது தெரிவித்துள்ளார். சமீபத்திலும், இதே மாதிரியான ஓர் சம்பவம் விபத்து சம்பவம் சர்வீஸ் மையத்தை மையமாகக் கொண்டு அரங்கேறியது. அஜாக்கிரதையாக செயல்பட்ட கியா சர்வீஸ் ஊழியர்களால் புத்தம் புதிய சொனெட் கார் விபத்துக்குள்ளானது.
ஆனால், காரை சர்வீஸ் முடிந்த பின்னர் டெஸ்ட் டிரைவ் செய்தபோது மாடு மீது மோதிவிட்டதாக சர்வீஸ் மைய அதிகாரிகள் பொய்யான தகவலை கூறியிருக்கின்றார். சிசிடிவி-யை பார்த்தபோதே உண்மை சம்பவம் என்ன என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம்குறித்த தகவல் இணையத்தில் வைரலானதை அடுத்து கியா சொனெட் கார் உரிமையாளருக்கு தற்போது புதிதாக ஓர் கார் வழங்கப்பட்டுள்ளது. இதுமாதிரியான ஓர் திருப்தியளிக்கும் செயல் நெக்ஸான் இவி விஷயத்தில் நடக்கவில்லை.
ஏன் தற்காலிக பயன்பாட்டிற்காககூட மாற்று வாகனம் அவருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்தநிலையிலேயே 45 நாட்கள் பொறுமைக்கு பின்னர் ராஜீவ் சர்வீஸ் மையத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம் தரப்பில் இருந்து, இந்த புகாரை மீண்டும் எங்களது குழு ஆராய தொடங்கியிருப்பதாக குறுந்தகவல் வந்திருக்கின்றது. நம் நாட்டில் பலருக்கு அவர்களுடைய வாகனம் என்பது குடும்பத்தில் ஒருவராக மாறியிருக்கின்றது. ஆனால், இதனை பெரும்பாலான கார் விற்பனையாளர்கள் உணர்வதே இல்லை. இதன் விளைவாக இதுமாதிரியான அலட்சியங்கள் தற்போது தொடர் கதையாக தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications