கார்களுக்கான வரியில் அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு!! கார்கள் விற்பனை பெரியளவில் குறைய வாய்ப்புள்ளதாம்!
புதிய 2022ஆம் வருடத்தை இந்தியா உள்பட பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் சந்தைகள் விலை அதிகரிப்புகள் உடன் துவங்கியுள்ளன. அதேநேரம் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான புதிய தயாரிப்புகளுடன் புதிய ஆண்டை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றன.

ஆனால் இத்தகைய கொண்டாட்டங்களை கொண்டாட முடியாத சூழலில் நமது அண்டை நாடான பாகிஸ்தானின் ஆட்டோமொபைல் சந்தை உள்ளது. ஏனெனில் அந்த நாட்டு அரசாங்கம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு கலால் வரியினை உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் நாட்டில் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளுக்கான கலால் வரியை அவ்வப்போது உயர்த்துவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இம்முறை பாகிஸ்தான் அரசு 1,000சிசி- 2000சிசி என மக்கள் அதிகம் வாங்கக்கூடிய கார்களின் கலால் வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் கார்களின் விலைகள் அதிரடியாக உயரும் சூழல் உருவாகியுள்ளது.

கார்களின் விலைகள் அதிகரித்தால், அவற்றிற்கான தேவை குறைய தொடங்கும். இதனால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கார்களின் விற்பனை குறையும். இது நேரடியாக மொத்த பாகிஸ்தான் நாட்டு ஆட்டோமொபைல் துறையும் சரிவடைய செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மினி பட்ஜெட் என்கிற பெயரில் பாகிஸ்தான் அரசின் புதிய பட்ஜெட்டின் ஒரு அங்கமாக இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 1000சிசி- 2000சிசி கார்களுக்கான கலால் வரி ஆனது 2.5% -இல் இருந்து 5% ஆக உயர்த்தப்பட உள்ளது. வாகன துறைக்கு உத்வேகம் அளிப்பதற்கு நேர்மறையான நடவடிக்கை என்பதால், இந்த நடவடிக்கை மிகவும் குழப்பமானதாக உள்ளதாக அந்த நாட்டில் மக்கள் பலர் கூறுகின்றனர். அதேபோல், 850சிசி- 1000சிசி கார்களின் பொது விற்பனை வரி 12.5% இல் இருந்து 17% ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2000சிசி-க்கு மேலான என்ஜின் கொண்ட கார்களுக்கான விற்பனை வரி 5% -இல் இருந்து 10% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மொத்தமாக வெளிநாட்டு சந்தைகளில் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களின் விலைகளும் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளன. பட்ஜெட் நிதியாண்டு 2023-க்கு பிறகு இந்த வரி உயர்வுகள் நிறுத்தப்படுமா அல்லது தொடருமா என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.

இந்த தெளிவின்மை புதிய 2022ஆம் காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டு சந்தையில் பிரபலமான கார்கள் என்று பார்த்தால், சுஸுகி வேகன்ஆர், கியா பிகாண்டோ மற்றும் யுனிடெட் மோட்டார்ஸின் ஆல்பா உள்ளிட்டவற்றை சொல்லலாம். கடந்த காலங்களில், பாகிஸ்தான் அரசு உள்ளூர் உற்பத்தியை பெருக்கும் விதத்தில் பல திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன் வெளிப்பாடாக, இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வாகனங்களை விலை உயர்ந்ததாக மாற்றும் தனது நோக்கத்தையும் பாகிஸ்தான் அரசாங்கம் காட்டியது. இருப்பினும் இதற்கு எதிர்மறையான நடவடிக்கையை தற்போது மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் பாகிஸ்தான் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இண்டூஸ் மோட்டார் நிறுவனத்தின் சிஇஓ அலி அஸ்கர் ஜமாலி கருத்து தெரிவிக்கையில், "புதிய பட்ஜெட் (2023ஆம் நிதியாண்டிற்கானது) வரும் வரையில் வரி மாற்றங்கள் செய்யப்பட்டால், உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படும் வாகனங்களின் விற்பனை 10- 15% வரை குறையும் என எதிர்க்கிறேன்." என்றார்.

இதுபோதாதென்று, பாகிஸ்தான் ஆட்டோமொபைல் துறையை வாட்டி வதைக்க உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை மற்றும் கொரோனா/ ஒமைக்ரான் வைரஸ்களின் பரவல் உள்ளிட்டவை வேறு ஒருப்பக்கம் உள்ளது. இதனால் நிச்சயமாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் 1000சிசி- 2000சிசி கார்களின் கலால் வரிகளை அதிகரிப்பதற்கான முடிவு மேலும் வலியை ஏற்படுத்தக்கூடும்.


Click it and Unblock the Notifications








