மயான அமைதி! ஒலி புகா கார் ஜன்னல் கண்ணாடியை உருவாக்கிய பிரபல நிறுவனம்... இரைச்சலின்றி நிம்மதியா போகலாம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று ஒலி புகா கார் ஜன்னல் கண்ணாடியை வெளியீடு செய்திருக்கின்றது. மிக விரைவில் இந்த கண்ணாடியை அதன் கார் மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

"அண்ணா நேத்து சாயங்காலம் ஒரு இடத்துக்கு போயிருந்தேன். அந்த இடத்துல ஒரு 'ஈ', 'காக்கா' கூட இல்ல. ஒரே மயான அமைதியா இருந்துச்சு" இப்படி நம்மில் பலர் கூறியிருக்கக் கூடும். பெரும்பாலான நேரங்களில் மயானங்கள் மிகவும் அமைதியாக தென்படும். இதன் காரணத்தினாலேயே மிகுந்த அமைதியாகக் காணப்படும் இடங்களை மயான அமைதியுடன் ஒப்பிட்டு (காரணமாக வைத்து) சிலர் பேசுகின்றனர்.

இத்தகைய ஓர் அமைதியையே மிக விரைவில் தனது வாகனங்களில் ஓர் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு மிக அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுக்கும் பொருட்டு இந்த பணியில் களமிறங்கியிருக்கின்றது.

இதன் அடிப்படையில் அந்நிறுவனம் புதிய ஜன்னல் கண்ணாடிகளை உருவாக்கி இருக்கின்றது. ஒலியைக் கட்டுப்படுத்தக் கூடிய ஐந்து அடுக்குகளிலான ஜன்னல் கண்ணாடிகளை அது உருவாக்கி இருக்கின்றது. இது மிகக் கடுமையான இரைச்சலைக் கூட தாங்கும் திறன் கொண்டது.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche)-வே ஐந்து அடுக்குகள் அமைப்புக் கொண்ட கார் ஜன்னல் கண்ணாடி உருவாக்கிய நிறுவனம் ஆகும். புதிய தொழில்நுட்பங்களை வாகன உலகில் அறிமுகம் செய்வதில் பல தசாப்தங்களாக போர்ஷே நிறுவனம் முன்னணில் இருந்து வருகின்றது.

தன்னுடைய இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஒலியைக் கட்டுப்படுத்தக் கூடிய ஜன்னல் கண்ணாடியை போர்ஷே உருவாக்கியிருக்கின்றது. அண்மையில் போர்ஷே நிறுவனம் டேகான் மின்சார காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதி-நவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாகவே நிறுவனம் உருவாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பமாக இந்த ஒலி புகா கார்களுக்கான ஜன்னல் கண்ணாடிகள் இருக்கின்றன. இதனை மிக விரைவில் தனது சொகுசு கார் மாடல்களில் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. தெர்மல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போர்ஷே நிறுவனம் இந்த ஜன்னல் கண்ணாடிகளை உருவாக்கி இருக்கின்றது.

சுரங்கம் மற்றும் டனல் வழி பாதைகளில் செல்லும்போது கார்களில் இருந்து எழும்பும் ஒலி பல மடங்கு அதிகரித்து மீண்டும் காருக்குள் எதிரொலிக்கும். இதுமாதிரியான சூழ்நிலையில் கார்களின் ஜன்னல் கண்ணாடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அவை முழு அளவில் ஒலியைக் கட்டுப்படுத்துவதில்லை. இதனால் எரிச்சலான அனுபவம் ஏற்படும்.

இந்த நிலையைக் களையும் பொருட்டே போர்ஷே நிறுவனம் புதிய ஜன்னல் கண்ணாடிகளை உருவாக்கி இருக்கின்றது. இந்த ஜன்னல் கண்ணாடியை நிறுவனம் காரின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்த இருக்கின்றது. அதாவது, பின், முன் மற்றும் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் ஒலியைக் கட்டுப்படுத்தக் கூடிய ஜன்னல் கண்ணாடிகளை பயன்படுத்த இருக்கின்றது.

ஐந்து லேயர்களைக் கொண்ட இந்த ஜன்னல் கண்ணாடியில் மூன்று லேயர்கள் ஃபில்ம்களும், மற்ற இரு லேயர்களாக பாலிவினில் பட்டிரேட் (PVB) பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது, ஒலியை அதிகளவில் கட்டுப்படுத்தக் கூடியது. மேலும், இந்த அனைத்து லேயர்களும் சேர்ந்து 7.3 சதவீதம் வரை இரைச்சலைக் குறைக்கும் என போர்ஷே நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இது மனிதனின் காதுகளுக்கு பாதுகாப்பான உணர்வை வழங்கும்.

ஆகையால், எதிர்காலத்தில் போர்ஷே கார் பயனர்கள் எந்த வித தொந்தரவும் இன்றி பயணிக்கக் கூடும் என்பது தெளிவாக தெரிகின்றது. ஏற்கனவே ஒலியைக் கட்டுப்படுத்தக் கூடிய வசதிக் கொண்ட கார்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனைக்கு வழங்கி வருகின்றன. ஆனால், அவற்றைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பானதாக போர்ஷேவின் இந்த புதிய தெர்மல் தொழில்நுட்ப வசதிக் கொண்ட கண்ணாடி செயல்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








