பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுக்கு டஃப் குடுக்க ரெடியாகும் மாருதி... இனிமேல் போட்டி அனல் பறக்க போகுது!
டாடா நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் பாதுகாப்பு அம்சங்களில் மேம்படுத்தப்பட்ட காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல மாருதி சுஸுகி பலேனோ கார் முதலிடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை பிடித்திருந்தாலும் கூட மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 16,648 பலேனோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜனவரி மாதம் வெறும் 6,791 ஆக குறைந்துள்ளது. இது 59.2 சதவீத வீழ்ச்சியாகும். தற்போது விற்பனை குறைந்திருந்தாலும் வரும் மாதங்களில் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை மீண்டும் அதிகரித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2022 மாருதி சுஸுகி பலேனோ காரின் உள்ளேயும், வெளியேயும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும் பாதுகாப்பு விஷயத்தில் புதிய மாடல் மேம்பட்டதாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நடப்பாண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் ஹூண்டாய் ஐ20 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 8,505 ஆக இருந்த ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜனவரி மாதம் 6,350 ஆக குறைந்துள்ளது. இது 25.3 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 7,378 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜனவரி மாதம் 4,525 ஆக குறைந்துள்ளது. இது 38.6 சதவீத வீழ்ச்சியாகும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் 1,347 க்ளான்சா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 2,556 ஆக இருந்தது. இது 47.3 சதவீத வீழ்ச்சி ஆகும். டொயோட்டா க்ளான்சா காரின் புதிய மாடலும் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா க்ளான்சா என்பது அனைவருக்கும் தெரியும். தெரியாதவர்களுக்காக சிறிய அறிமுகம். சுஸுகி நிறுவனத்துடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இதன் அடிப்படையில் மாருதி சுஸுகி கார்களை ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யும் பணிகளை டொயோட்டா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அதாவது பேட்ஜ் உள்பட ஒரு சில மாற்றங்களை செய்து விட்டு, தனது பிராண்டின் கீழ் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2 கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது. ஒன்று மாருதி சுஸுகி பலேனோ. டொயோட்டா பிராண்டில் இதுதான் க்ளான்சா கார்.

மற்றொன்று மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா. டொயோட்டா பிராண்டில் இது அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மாருதி சுஸுகி பலேனோ கார் புதுப்பிக்கப்படுவதால், டொயோட்டா நிறுவனமும் மேம்படுத்தப்பட்ட க்ளான்சா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் போலோ ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் 1,747 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜனவரியில் 891 ஆக குறைந்துள்ளது. இது 48.9 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஆறாவது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா ஜாஸ் பிடித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 953 ஜாஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜனவரி மாதம் 588 ஆக குறைந்துள்ளது. இது 38.3 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் உள்ள அனைத்து கார்களுமே விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், வரும் மாதங்களில் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








