இப்போ நாம இருக்கற நிலைமைல இந்த பிரச்னை வேறயா? கார், பைக் விலை உயர போகுது... காரணம் என்னனு தெரியுமா?
இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, கார் மற்றும் டூவீலர்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021-2022ம் நிதியாண்டு முடிவுக்கு வரவுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதன்பின் புதிய நிதியாண்டு பிறக்கவுள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் செயல்பட்டு வரும் வாகன நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் முதல் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே விலை உயர்வை அறிவித்து விட்டது. இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலைகளை உயர்த்த தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை உயரவுள்ளது. இந்த வரிசையில் மற்ற கார் மற்றும் டூவீலர் நிறுவனங்களும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வரும் ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் நிறைய கார்கள் மற்றும் டூவீலர்களின் விலைகள் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது கார்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. அதாவது ரப்பர், ஸ்டீல் மற்றும் மற்ற உலோகங்களின் விலைகள் உயர்வடைந்து வருகிறது.

இதன் காரணமாக வாகனங்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை பிரச்னை இன்னமும் நிலவி வருகிறது. இது கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, உலகளாவிய செமி கண்டக்டர் சிப் சப்ளையில், நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வாகனங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடப்பாண்டு ஜனவரி மாதம் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலைகளை உயர்த்தின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதற்குள்ளாக வாகனங்களின் விலை மீண்டும் ஒரு முறை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்களின் விலை உயர்ந்து கொண்டே வருவதால், மக்கள் வாகனங்களை வாங்கும் முடிவை கைவிடுவதற்கோ அல்லது தள்ளி போடுவதற்கோ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையில் வாகனங்களின் விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கடந்த 2021ம் ஆண்டும் பல்வேறு முறை முன்னணி வாகன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை அதிரடியாக உயர்த்தின என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எரிபொருள் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இப்படி வாகனங்களின் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே புதிய வாகனங்களின் விலைகள் உயர்ந்து கொண்டே வருவதால், யூஸ்டு கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய கார்களை வாங்க திட்டமிடும் பலர், இறுதியில் யூஸ்டு கார்களை வாங்கி விடுகின்றனர். புதிய கார்களின் விலையுடன் ஒப்பிடும்போது, யூஸ்டு கார்களின் விலை குறைவு என்பதுதான் இதற்கு காரணம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு யூஸ்டு கார் மார்க்கெட் நன்றாக வளர்ச்சி அடைந்தது. வரும் காலங்களிலும் யூஸ்டு கார் மார்க்கெட் நன்றாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே ஏராளமான முன்னணி நிறுவனங்கள் யூஸ்டு கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. வரும் காலங்களில் யூஸ்டு கார் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் உயரவுள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு, யூஸ்டு கார்களுக்கான 'டிமாண்ட்' நன்றாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் புதிய கார்களுக்கு பதிலாக பலர் யூஸ்டு கார்களை வாங்குகின்றனர். அத்துடன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை தவிர்க்க நினைப்பவர்களின் தேர்வாகவும் யூஸ்டு கார்கள் உள்ளன.

மேலும் அரசும் அவ்வப்போது பொது போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து விடுவதால், சொந்தமாக ஒரு கார் இருந்தால் பரவாயில்லை என்ற எண்ணமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களின் தேர்வாக இருப்பதும் கூட யூஸ்டு கார்கள்தான். இந்தியாவில் வரும் காலங்களிலும் யூஸ்டு கார் சந்தைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பது வல்லுனர்களின் கருத்து.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








