இனி பின் சீட்டில் சீட் பெல்ட் போடவில்லை என்றாலும் அலாரம் அடிக்கும்... மத்திய அரசு அதிரடி முடிவு...
சைரஸ் மிஸ்திரியின் விபத்திற்குப் பிறகு இனி கார்களின் பின் சீட்டிலும் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட மத்திய அரசு பல அதிரடியாக எடுத்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சமீபத்தில் குஜராத்திலிருந்து மும்பையில் மெர்சிடீஸ் காரில் வரும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். அவர் வந்த கார் ஒரு பாலத்தின் மீது மோதியதில் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி காருக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாகப் பலியானார்.

இந்த விபத்தில் அவர் பின் சீட்டில் அமர்ந்திருந்த போது சீட் பெல்ட் அணியாதது தான் அவர் விபத்தில் உயிரிழந்ததற்கு முக்கியமான காரணம் எனப் பேசப்பட்டது. இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு கார் விபத்தில் முன் சீட்டிலிருந்தவர்கள் சீட் பெல்ட் போட்டதால் பிழைத்துக்கொள்ள பின் சீட்டில் அமர்ந்திருந்தவர் உயிரிழந்தது பலரை வியக்க வைத்தது.

இத்தனைக்கும் அவர் சென்ற மெர்சிடீஸ் ஜிஎல்ஜி கார் 5 ஸ்டார் ரேங்கிங்கை பெற்றது. இத்தனையும் இருந்தும் அவர் சீட் பெல்ட் போடவில்லை என்ற காரணத்திற்காக அவர் உயிரிழந்தது. பலரை யோசிக்க வைத்துள்ளது. இதையடுத்து மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆட்டோ மொபைல் துறையில் சில மாற்றங்கள் கொண்டு வர ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் மத்திய அரசு சமீப ஆண்டுகளில் இந்தியாவில் சாலை விபத்துக்களில் பின் சீட்டில் சீட்பெல்ட்போடததால் மட்டும் 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து நிதின் கட்காரி இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் கார் உற்பத்தியாளர்களுக்கு ஒரு புது விதிமுறையைக் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் அனைத்து சீட்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பக்கத்தில் உள்ள டிரைவர் மற்றும் பயணிகள் சீட்களுக்கு மட்டுமே 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் கொடுக்கப்படுகிறது மற்ற பயணிகளுக்கு பெரும்பாலான கார்களில் 2 பாயிண்ட் சீட் பெல்ட்கள் வழங்கப்படுகிறது.

பெரும்பாலான கார்களில் முன்பக்க சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் கார் நகர்ந்தால் அலாரம் அடிக்கும் சிஸ்டம் தற்போது இருக்கிறது. சில கார்களில் இந்த அலாரத்தை ஆஃப் செய்யும் ஆப்ஷனும், பல கார்களில் இந்த அலாரம் தானாக சில நிமிடங்களில் நின்றுவிடும் ஆப்ஷனுமே இருக்கிறது.

வெகு சில கார்கள் மட்டுமே சீட் பெல்ட் அணியாமல் கார் இயங்காது என்ற ஆப்ஷன் உடன் இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த காரிலும் பின் சீட்டில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் எச்சரிக்கும் அலாரம் இல்லை. இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி விபத்து சம்பவத்திற்குப் பிறகு 3 முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி மத்திய அரசு இனி கார்களில் சீட் பெல்ட் அணிவில்லை என்றால் சீட் பெல்ட் அணியும் வரை எச்சரிக்கை அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது மட்டுமல்ல பின்பக்க சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றாலும் இனி அலாரம் அடிக்க வேண்டும் என மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கார்களில் இனி 6 ஏர்பேக் மற்றும் பின்பக்க இருக்கையிலும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்களை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. வெளிமார்கெட்டில் சீட் பெல்ட் கிளப்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சீட் பெல்ட் கிளிப்களை வாங்கி சீட்பெல்ட் மாட்டும் இடத்தில் மாட்டிவிட்டால் இந்த அலாரம் அடிக்காது, சீட் பெல்ட் போடவும் தேவையில்லை. இந்நிலையில் அரசு சீட்பெல்ட் கிளிப்களின் விற்பனையையும் தடை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதனால் இனி மக்கள் கார்களில் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தற்போது இந்தியாவில் கார்களில் சீட்பெல்ட் அணியாமல் பயணிப்பது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்திற்கு ரூ1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் இன்றும் மக்கள் மத்தியில் சீட்பெல்டின் முக்கியத்துவம் தெரிவதில்லை. காரில் சென்றதும் முதல் வேலையை சீட் பெல்ட் போடுவதையே முதல் வேலையாகச் செய்து பழகிக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








