யாருமே எதிர்பாக்கல... அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த ஸ்கோடா நிறுவனம்... இதெல்லாம் வேற லெவல்!
ஸ்கோடா நிறுவனம் அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் 5,152 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதெல்லாம் பெரிய எண்ணிக்கையா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 961 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இதனுடன் ஒப்பிட்டால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஸ்கோடா நிறுவனம் மிக பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். துல்லியமாக சொல்வதென்றால் இது 436 சதவீத வளர்ச்சியாகும். அத்துடன் மற்றொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். நடப்பாண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டதுதான், இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் 2வது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையாகும்.

முன்னதாக இந்தியா சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம்தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. நடப்பாண்டு மார்ச் மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் 5,608 கார்களை விற்பனை செய்திருந்தது. இதற்கு முன்பு நமது இந்திய சந்தையில் ஒரே மாதத்தில் ஸ்கோடா நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்ததில்லை.

இந்த சூழலில் அதன் பின் வந்த ஏப்ரல் மாதத்தில் தனது 2வது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை ஸ்கோடா இந்தியா நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் சமீப காலமாக இந்திய சந்தையில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதற்கு அதன் 2 புதிய கார்கள்தான் மிக முக்கியமான காரணம்.

ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவைதான் அந்த 2 கார்கள். இதில் மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஸ்கோடா குஷாக் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவை இதன் முக்கியமான போட்டியாளர்களாக இருக்கின்றன.

மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா கார் இந்திய சந்தையில் இரண்டு கட்டங்களாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் வேரியண்ட்கள் நடப்பாண்டு பிப்ரவரி மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதே நேரத்தில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் வேரியண்ட்கள் நடப்பாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

ஸ்கோடா ஸ்லாவியா காரானது, மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்தது ஆகும். ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் ஆகியவை இதன் முக்கியமான போட்டியாளர்களாக இருக்கின்றன. வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் காரும், ஸ்கோடா ஸ்லாவியாவிற்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதுதவிர ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் தனது சிட்டி செடான் காரின் ஹைப்ரிட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. எனவே வரும் மாதங்களில் இந்தியாவின் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஸ்கோடா நிறுவனத்தின் தற்போதைய வெற்றிகரமான பயணத்திற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதுதான் அந்த காரணம் ஆகும். வரும் காலங்களில் ஸ்கோடா டீலர்ஷிப்களின் எண்ணிக்கையில் மேலும் வளர்ச்சியை நாம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் குஷாக் ஆம்பிசன் கிளாசிக் வேரியண்ட்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் மிகவும் முனைப்புடன் செயல்பட தொடங்கியிருப்பதற்கு இவைகள் மிக முக்கியமான உதாரணம் ஆகும். ஒரு சமயத்தில் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்ட ஸ்கோடா நிறுவனம் தற்போது வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








